மும்பை : தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இது மிக மோசமான காலம் என்றே கூறலாம். அதிலும் பார்தி ஏர்டெல்லுக்கு இது மிக மிக மோசமான காலமே.
ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நிலைகுலைந்த ஏர்டெல்லுக்கு, மத்திய அரசின் கால அவகாசம் சற்றே நிம்மதியை கொடுத்தது.
இந்த நிலையில் தற்போது முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா (ICRA), ஏர்டெல்லின் நீண்டகால மதிப்பினை குறைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.
எவ்வளவு குறைத்துள்ளது?
தொலைத் தொடர்பு துறையில் உள்ள போட்டியின் காரணமாக பலத்த அடியினை கண்டுள்ள இந்த நிறுவனத்தின், நீண்ட கால மதிப்பீட்டை "AA" யிலிருந்து "AA -"ஆக குறைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அதிகம் உள்ளதே என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்திய காலாண்டு முடிவுகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஏர்டெல் கண்காணிக்கப்பட்டு வருகிறது
பெரிய அளவிலான தொகையை தற்போதைக்கு செலுத்தவில்லை என்றாலும், அது நிலுவையில் தான் இருக்கும். இது கடன் மூலம் திருப்பி அளிக்கப்பட்டால், ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள இந்த நிறுவனம் இன்னும் மோசமான நிலையை அடையும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இக்ரா பார்தி ஏர்டெல்லின் மதிப்பீடுகள் எதிர்மறையான தாக்கங்களுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இக்ரா தெரிவித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் நஷ்டம்
எனினும் பார்தி ஏர்டெல்லின் வணிகத்தாளில் மதிப்பீடுகள் "A1+"இல் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது செப்டம்பர் காலாண்டில் வெளியிடப்பட்ட நஷ்டத்தை தொடர்ந்து இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இக்ரா. இது தவிர ஆப்பிரிக்காவின் சில முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முதலீடுகள் தொடர்பான கூடுதல் ஏற்பாடுகளும் கடன் எதிர்மறையாகும். இது மேலும் இதன் மதிப்பை குறைப்பதற்கு வழிவகுத்தது.
நிலைமையை ஆராய குழு
இந்த நிலையில் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்கும், இந்தத் துறைக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்திய அரசு ஒரு செயலாளர்கள் குழுவை நியமித்துள்ளது என்றும் இக்ரா குறிப்பிட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த ஏஜிஆர் நிலுவை வழக்கு, கடந்த அக்டோபர் 24ம் தேதியன்று 92,000 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை தொகையை செலுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள வருவாய்
இது சம்பந்தமாக இந்திய தொலைத் தொடர்பு துறையானது, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வரியை குறைவாக செலுத்துவதற்கும், தங்களது வருவாயை குறைவாக மதிப்பிட்டுள்ளன. இதன் மூலம் அரசாங்கத்திற்கு குறைந்த வரிகளையே செலுத்துகின்றன என்றும் குற்றம் சாட்டியது. இந்த நிலையில் அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில், பார்தி ஏர்டெல் 21,682 கோடி ரூபாயாக செலுத்த வேண்டிய பாக்கி வைத்துள்ளதாகவும், இதே வோடபோன் ஐடியா 28,309 கோடி ரூபாயும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையும் இருப்பதாக கூறப்படுகிறது.
சுய மதிப்பீடு செய்யுங்கள்
இதே ரிலையன்ஸ் ஜியோ 13 கோடி ரூபாய் நிலுவை தொகை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்பளித்த மூன்று மாதங்களுக்குள் இந்த நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 13ம் தேதியன்று, தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களை மீண்டும் சுய மதிப்பீடு செய்யுமாறு தெரிவித்துள்ளது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல
ஏற்கனவே ஜியோவின் வருகையால் மிக கடுமையானதொரு போட்டியை சமாளிக்க, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது லாபத்தினையும் மறந்து குறைந்த விலைக்கு கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனாலேயே பெரும் அழுத்தத்தில் காணப்பட்ட நேரத்திலேயே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, கொழுந்து விட்டு எரிய தொடங்கிய நிலையில் தான், செப்டம்பர் காலாண்டு அறிக்கையும் வந்தது.
ஏர்டெல்லுக்கு பாதகமே
இதில் கொடுமை என்னவெனில், இதில் எந்தவொரு விஷயமும் ஏர்டெல்லுக்கு சாதகமாக இல்லை. மாற்றாக மேலும் மேலும் பிரச்சனையை கொடுத்தன. இதனால் மீண்டும் மீண்டும் அதள பாதளத்திற்கே தள்ளப்பட்டது ஏர்டெல். இந்த நிலையில் தான் கடந்த நவம்பர் 20ம் தேதியன்று, பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதற்கு 2 வருடம் கால அவகாசம் கொடுத்தது. இது சற்றே நிம்மதியை கொடுத்தாலும், அதை கெடுக்கும் விதமாக தற்போது இக்ரா மதிப்பீடு வந்துள்ளது.
கட்டண உயர்வு
எனினும் மனம் தளராத ஏர்டெல் உள்பட பல நிறுவனங்கள் அடுத்த மாதம், கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளன. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் காலாண்டில் 1,365.79 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளது. இது கடன் பாதுகாப்பு குறிகாட்டிகளை இது அழுத்தத்தில் வைத்திருக்கிறது என்றும் கூறலாம்.