கொரோனாவின் தாக்கத்தினால் ஐடி துறையின் வளர்ச்சியில் 3 - 5% வளர்ச்சி குறையலாம் என கடந்த வாரம் இக்ரா அறிக்கை ஒன்று கூறியது.
இது குறித்து வெளியான அறிக்கையில் தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் குறையலாம். இதற்கு முக்கிய காரணம் உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தான் என்றும் இக்ரா அறிக்கையில் கூறியிருந்தது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இதற்கு முன்பு, அதாவது கொரோனா பரவலுக்கு முன்பு, ஐடி துறையானது 6 - 8% வளர்ச்சி காணும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐடி துறை அடி வாங்கலாம்
அதிலும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பெருத்த அடி காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல, இந்த நிலைமை அடுத்த நிதியாண்டில் தான் சீரடையும் என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன. எப்படி இருப்பினும் ஐடி நிறுவனங்களின் நிதி நிலைமை பெரியளவில் மாற்றம் இருக்காது. குறுகிய காலத்தில் தாக்கம் இருந்தாலும், நீண்டகால நோக்கில் நல்ல வளர்ச்சி காணும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வருவாய் குறையும்
உலகளவில் பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் தேவை குறையவும் வாய்ப்புள்ளது. அதே சமயம் விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிலும் ஐடி துறையில் முக்கிய வருவாய் நாடுகளாக திகழும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் தான் தற்போது கொரோனாவின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது. ஐடி துறைக்கு கிடைக்கும் வருவாயில் கிட்டதட்ட 80% வருவாய் இங்கிருந்து தான் கிடைக்கிறது.
ஜிடிபியில் வீழ்ச்சி இருக்கலாம்
இதனால் ஐடி துறையில் வருவாய் குறையலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜிடிபியில் 2.3% வீழ்ச்சியினை இதன் மூலம் நாம் காண முடியும். இப்படியாக ஏற்கனவே பலத்த அடி வாங்கியுள்ள நிலையில், மத்திய அரசானது சில தளர்வுகளை அறிவித்திருந்தாலும், சில மாநில அரசுகள் தங்களின் மக்களின் நன்மையை கருதி, அத்தியாவசிய தேவை தவிர தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்குமாறு கர்நாடகா அரசு கூறியுள்ளது.
ஊழியர்களுக்கு அனுமதி
இதற்கிடையில் மைண்ட்ட்ரீ, விப்ரோ, இன்ஃபோசிஸ், டெல் டெக்னாலாஜிஸ் என பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்துள்ளது. ஊரடங்கில் தளர்வு விதிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் நலன் கருதி இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல பொதுப் போக்குவரத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறையலாம்
இங்கு மட்டும் அல்ல மும்பையிலும் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஐடி துறையின் வளர்ச்சி குறையலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது இன்னும் வளர்ச்சியில் வீழ்ச்சி காண வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மக்களை காப்பாற்ற சிலவற்றை இழந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று கூறியிருந்த நிலையில், மக்களை காப்பாற்ற இதுபோன்றவற்றை நாம் ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்.