பொதுவாகக் குஜராத் வைர ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் லாபத்தில் ஒரு பகுதியை முக்கியமான ஊழியர்களுக்கும், திறன் வாய்ந்த ஊழியர்களுக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாக அளிப்பது வழக்கம்.
ஆனால் இந்தக் கலாச்சாரம் தற்போது தமிழ்நாட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது என்றால் மிகையில்லை, குறிப்பாகத் தமிழ்நாட்டில் தமிழர்களால் நிர்வாகம் செய்யப்படும் முன்னணி நிறுவனங்கள் இதுபோன்ற டிரெண்டை உருவாக்குவது பல கோடி இளைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
கிஸ்ப்லோ நிறுவனம்
சமீபத்தில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கிஸ்ப்லோ நிறுவனம் கடந்த வாரம் 5 முக்கிய உயர் மட்ட அதிகாரிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான BMW கார்களை அளித்துச் சக ஐடி மற்றும் டெக் ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தத் தாக்கம் தீர்வதற்குள் மற்றொரு சென்னை நிறுவனம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
Ideas2IT நிறுவனம்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Ideas2IT நிறுவனம், தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து, இணையற்ற பங்களிப்பை பாராட்டும் விதமாக 100 ஊழியர்களுக்குப் புதிய மாருதி கார்களைக் கொடுத்து அசத்தியுள்ளது.
Ideas2IT
100 புதிய மாருதி சுசூகி காரை Ideas2IT நிறுவனத்தின் சிஇஓ காயத்திரி விவேகானந்தன் 100 ஊழியர்களுக்கு, இந்நிறுவன நிறுவனர் மற்றும் தலைவரான முரளி விவேகானந்தன் முன்னிலையில் இன்று அளிக்கப்பட்டது. இதே நாளில் முரளி விவேகானந்தன் Ideas2IT நிறுவனத்தின் புதிய அலுவலகத்தைச் சென்னை கிண்டி பகுதியில் திறக்கப்பட்டது.
100 கார்கள்
100 ஊழியர்களுக்கு 100 கார்களைக் கொடுத்தது குறித்து Ideas2IT நிறுவனத்தின் நிறுவனர் முரளி விவேகானந்தன் கூறுகையில், கார்களைப் பரிசளிப்பது குறித்து ஊழியர்களால் இணைந்து கூட்டாக முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின் படி நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் கார் வழங்கப்பட்டு உள்ளது.
முரளி விவேகானந்தன்
100 ஊழியர்களுக்கு 100 கார் பரிசு என்பது அவர்கள் இனிமேல் செய்யப்போகும் பணிகளுக்கானது அல்ல, இதுவரை அவர்கள் செய்த பணிக்கானது. Ideas2IT நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஊக்கத் திட்டங்களின் முதல் படி தான் இது, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு வளர்ச்சி ஒரு பங்கை அளிக்கும் முயற்சியாக இத்தகைய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம் என முரளி விவேகானந்தன் கூறியுள்ளார்.
2009 முதல் பயணம்
Ideas2IT நிறுவனம் 2009 ஆம் ஆண்டு ஆறு இன்ஜினியர்களால் நிறுவப்பட்டது, தற்போது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் இந்தியா உட்படப் பல இடங்களில் 500 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
முன்னணி நிறுவனங்கள்
இந்நிறுவனம் தற்போது பேஸ்புக், ப்ளூம்பெர்க், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், மோட்டோரோலா, ரோச்சே, மெட்ரானிக் உட்படப் பல முன்னணி நிறுவனங்களுக்கு மேம்பட்ட மென்பொருள் திட்டங்களை வழங்குகிறது.
CEO காயத்ரி விவேகானந்தன்
100 ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்காக 100 கார்களை வழங்கி கவுரவித்த முதல் இந்திய ஐடி நிறுவனம் என்பதில் பெருமை கொள்கிறோம் என Ideas2IT நிறுவனத்தின் சிஇஓ காயத்ரி விவேகானந்தன் கூறியுள்ளார். Ideas2IT நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அவர்கள் முக்கிய பங்காற்றினர் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.