உலக நாடுகள் பலவும் இன்று எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளில் மிக மோசமான பிரச்சனையே பணவீக்கம் தான். இப்பிரச்சனையை தீர்க்க உலக நாடுகள் பலவும் பற்பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
அந்த வகையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 14 - 15ம் தேதிகளில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது. இரண்டாவது நாளாக நடைபெறும் இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி அதிகரிக்கலாம்
இந்த முறையும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையில் பலத்த சரிவு இருந்தது. இது முதலீட்டாளர்கள் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுக்காக காத்திருப்பதை சுட்டிக் காட்டுகின்றது.
எதிர்பார்ப்பு
சி எம் இ குழுமத்தின் அறிக்கையின் படி, சந்தைகள் ஏற்கனவே 95% சாத்திய கூறில் உள்ளன. ஆக மற்றொரு 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே கோல்டுமேன் சாச்ஸ், ஜேபி மார்கன் சேஸ் &கோ, பார்க்ளோஸ் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் 75 அடிப்படை புள்ளிகள் இருக்கலாம் என கணித்துள்ளன.
இவ்வளவு அதிகரிக்குமா?
அதே சமயம் டபுள்லைன் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஜெஃப்ரே குண்ட் லாச், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். வட்டி விகித அதிகரிப்பானது 3% ஆக உயர்த்தலாம் என பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.
இந்தியாவில் என்ன பாதிப்பு இருக்கலாம்?
அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரிக்கும்போது, அது இந்தியாவில் இருக்கும் முதலீடுகளை வெளியேற்ற தூண்டலாம். அன்னிய முதலீட்டாளர்கள் 2021 - 22ம் நிதியாண்டில் 29 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அக்டோபர் 2021 - பிப்ரவரி 2022க்கும் இடையில் மட்டும் 80% அதிகமான விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தினை தூண்டலாம்
ரூபாய் மற்றும் டாலர் மாற்று விகிதங்கள் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தலாம், இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவினைக் காணலாம். இதனை தொடர்ந்து எண்ணெய் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிக்கலாம். இது இறக்குமது பணவீக்கத்தினை தூண்டலாம். இது உற்பத்தி செலவினத்தினையும் அதிகரிக்கலாம். இது சங்கிலித் தொடராக சில்லறை பணவீக்கத்தினையும் தூண்டலாம்.
பொதுவான பாதிப்புகள்
அமெரிக்காவின் வட்டி விகிதத்தினை தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது குறுகிய கால கடன்களில் எதிரொலிக்கலாம். நுகர்வோரின் செலவினங்களை குறைக்க தூண்டலாம். மறுபக்கம் நிறுவனங்களின் வருவாயிலும் தாக்கம் ஏற்படலாம். பொதுவாக வீடு, வாகனங்கள், தனி நபர் கடன் என அனைத்திற்கும் வட்டி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கலாம். பத்திர சந்தையும் வீழ்ச்சி காணலாம்.