பொதுவாக நம்மிடம் யாராவது லஞ்சம் கேட்டால், பணம் கொடுக்க கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே என்று பலருக்கும் கோபம் வரும். ஆனால் அவசர தேவை காரணமாக அவர்களை கேட்பதை கொடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவோம். ஆனால் மனதில் இதற்கு விடிவுகாலமே கிடைக்காதா? என்ற பலரும் புலம்பியிருக்கலாம்.
அப்படி நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு சமர்ப்பணம். இந்தியாவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய், 2,000 ரூபாய் தாள்களாக உள்ளன. ஆனால் ஜீரோ ரூபாய் நோட்டு பற்றி தெரியுமா? என்றால் நிச்சயம் பலருக்கும் தெரிந்திருக்காது.
சமீபத்திய தினங்களாகவே ஜீரோ ரூபாய் என்ற வார்த்தை அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. உண்மையில் இந்தியாவில் ஜீரோ ரூபாய் நோட்டு என்பது உள்ளதா? இது எதற்காக பயன்படுத்தப்படுகின்றது. வாருங்கள் அதனை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
ஜீரோ ரூபாய் நோட்டா?
இந்தியாவில் ஜீரோ ரூபாய் நோட்டு என்பது பற்றி கேட்டால் பலரும் ஜீரோ ரூபாய் நோட்டா? அதை வைத்து என்ன செய்ய முடியும் என்று ஆச்சரியப்படுவதை பார்க்க முடிகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு தாசப்தத்திற்கும் மேலாக ஜீரோ ரூபாய் நோட்டுகள் உள்ளன. எனினும் இந்த நோட்டுகள் மற்ற ரூபாய் தாள்களை போல ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுவதில்லை. இதனால் தான் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை எனலாம்.
ஜீரோ ரூபாய் அறிமுகம்?
பொதுவாக கரன்சிகளை ரிசர்வ் வங்கி தானே அச்சிடும், ஆனால் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை எனில், வேறு யார் தான் வெளியிடுகிறார்கள் எனில் இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது சிறப்பான நோக்கத்திற்காக வெளியிடப்படும் நோட்டுகளாக உள்ளன. இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் கடந்த 2007ம் ஆண்டில் அறிமுகமானது. இதனை 5வது தூண் (பிப்த் பில்லர்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது.
எதற்காக இந்த ஜீரோ ரூபாய்?
இந்தியாவில் பொதுவாக பல இடங்களிலும் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது இன்றும் இருந்து வருகின்றது. இந்த ஊழலை, லஞ்சத்தினை விரட்டும் விதமாகவும், அவர்களுக்கு சரியான பாடம் புகட்டவும் தான் இந்த ஜீரோ நோட்டுகள் உருவாக்கப்பட்டன.
நேர்மையற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடுக்க கொண்டு வரப்பட்ட இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள், ஒரு புறம் தான் அச்சிடப்பட்டிருக்கும்.
பல மொழிகளில் அச்சு
பொதுவாக இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் பல மொழிகளிலும் அச்சிடப்படுகின்றது. குறிப்பாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் உள்ளது. இது ஊழலை ஒழிக்க அகிம்சையான முறையில் பயன்படுத்தும் ஒரு ஆயுதமாக பார்க்கப்படுகிறது. ஆக இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் ஊழலுக்கு மத்தியில் ஒரு பெரும் எச்சரிக்கை ஆயுதமாக பார்க்கப்படுகிறது.
எங்கு வாங்கலாம்?
இது முதன் முதலாக சென்னையில் தான் அச்சிடப்பட்டது. ஆனால் தற்போது இதனை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளும் ஆப்சன் உண்டு. இதனை https://5thpillar.org/ என்ற இணையத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். இதன் மேல் பக்கத்தில் பார்க்க ரூபாய் நோட்டுபோல இருந்தாலும், அதில் யாரேனும் லஞ்சம் கேட்டால் இதனை கொடுத்து விடவும் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
விருப்பமில்லை
அதே போல இந்த தாளின் மேல் பகுதியில் லஞ்சம் மற்றும் ஊழலை அறவே ஒழிப்போம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் +914465273056 என்ற தொடர்பு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரூபாய் தாள்களால் பொருளாதாரத்தில் எந்த வித தாக்கமும் இல்லாவிட்டாலும், நமக்கு ஊழல், லஞ்சம் கொடுப்பதில் விருப்பமில்லை என்பதை புரிய வைக்க முடியும். இதுவும் ஒரு மறைமுக ஆயுதம் தான்.