ஐஐடி கரக்பூரில் படித்த இளம் இந்தியர்களான வருண் வும்மாடி மற்றும் ஈஷா மதீப் ஆகியோர் தற்போது உலகமே பேசும் சாதனை ஒன்றை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து தொடங்கிய 'ஜிகா' (Giga) என்ற குரல் அடிப்படையிலான AI ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தங்கள் நிறுவனத்தை வளர்க்க முதலீடு திரட்டியபோது, 61 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.500 கோடிக்கு மேல்) பணம் கிடைத்துள்ளது. இது சிலிக்கான் வேலியில் இவர்கள் பெற்ற பெரிய வெற்றியாகும். ஃபோர்ப்ஸ் இதழின் 30 வயதுக்குட்பட்ட சிறந்த சாதனையாளர்கள் பட்டியலிலும் இவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தாங்கள் இவ்வளவு பெரிய முதலீட்டைப் பெற்ற செய்தியை நிறுவனர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் வீடியோவாகப் பகிர்ந்தனர். தங்கள் தொழில்நுட்பத்தை ஏற்கனவே டோர்-டாஷ் போன்ற பெரிய நிறுவனங்கள் பயன்படுத்துவதாகவும், இன்னும் பல உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களுக்குத் தங்கள் சேவையை விரிவுபடுத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அவர்களின் இந்த சாதனையை கொண்டாடுவதற்கு பதிலாக, பல இணைய பயனர்கள் அவர்களை கேலி செய்ய தொடங்கினர். அவர்களின் தோற்றம், அவர்கள் பேசும் இந்திய உச்சரிப்பு மற்றும் இந்தியப் பின்னணி ஆகியவற்றை குறிவைத்து தாக்கிப் பேசினர்.
ஒரு நபர், "61 மில்லியன் டாலர் திரட்டினால், ஏன் இன்னும் அழகாக இருக்கும் ஒருவரை வேலைக்கு வைக்கக் கூடாது?" என்று மிகவும் மோசமாக கருத்து தெரிவித்தார். இந்த வெறுப்பான பேச்சை பார்த்த மற்ற பயனர்கள் உடனே அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். "புத்திசாலித்தனத்தில் போட்டி போட முடியாதவர்கள், மற்றவர்களின் தோற்றத்தை தாக்குவார்கள். இது நகைச்சுவை அல்ல, இது அவர்களின் தாழ்வு மனப்பான்மையை காட்டுகிறது" என்று ஒரு பயனர் பதிலளித்தார்.
மற்றொருவர், "நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு 12 டாலர் சம்பளத்தில் கஷ்டப்படும்போது, இவர்கள் இருவரும் கோடீஸ்வரர்களாக மாறுவதை பாருங்கள்" என்று காட்டமாக தெரிவித்தார். பலர் நிறுவனர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, "அவர்கள் தயாரித்த உபகரணம் தான் சிறப்பாக இருக்கிறது. அதுதான் முக்கியம். நீங்கள் எலான் மஸ்க் அழகாக இருக்கிறார் என்பதற்காக எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவதில்லை; அந்தத் தளம் நன்றாக இருப்பதால் தான் பயன்படுத்துகிறீர்கள்" என்று பதிவிட்டனர்.
இந்த ஜிகா நிறுவனம், வாடிக்கையாளர்களுடன் பேசிப் பழகும், பல மொழிகளை கையாளும் திறன் கொண்ட AI அமைப்புகளை உருவாக்குகிறது. இந்த AI ஒரே நேரத்தில் பேசவும், மெசேஜ் அனுப்பவும் செய்யும் வசதி முதலீட்டாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
வருண் வும்மாடி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிக்கும் வாய்ப்பையும், ரூ.4 கோடிக்கும் அதிகமான சம்பளத்துடன் ஒரு நிதி வர்த்தக நிறுவன வேலையையும் வேண்டாம் என்று மறுத்தார். ஈஷா மதீப்பும் மிகப் பெரிய சம்பளத்துடன் ஒரு இந்திய நிறுவனத்தில் கிடைத்த வேலையை ஒதுக்கிவிட்டார். "இயந்திர கற்றலில் உள்ள சிக்கலான சவால்களை தீர்க்க வேண்டும் என்ற எங்கள் ஆசையை தொடர, கிடைத்த எல்லா பெரிய வாய்ப்புகளையும் நாங்கள் விட்டுவிட்டோம்" என்று வருண் முன்பு ஒரு பதிவில் எழுதியிருந்தார். இந்தச் சம்பவம், வெளிநாடுகளில் உள்ள தொழில்நுட்பத் துறைகளில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் இனப்பாகுபாட்டையும், கேலிகளையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications