நாட்டிலேயே முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) நாடு முழுவதுமே புகழ்பெற்றது. இங்கே பொறியியல் பயின்ற ஏராளமான மாணவர்கள் தற்போது பெரிய டெக் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். எனவே ஐஐடி மெட்ராஸில் எப்படியாவது பொறியியல் படிக்க சீட் கிடைக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோரும் ஆர்வம் காட்டுவது உண்டு.
பொறியியல் மற்றும் டெக் படிப்புகளுக்கு பெயர் போன மெட்ராஸ் ஐஐடி தனது கல்வி எல்லையை விரிவுபடுத்தும் புதிய முயற்சியாக, வரும் காலங்களில் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படிப்புகளையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், தற்போது பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சிறந்து விளங்கும் ஐஐடி மெட்ராஸ், மருத்துவ துறையிலும் தனது பங்களிப்பை வழங்க முற்பட்டுள்ளது. பொறியியல் தொழில்நுட்பத்தையும், நவீன மருத்துவத்தையும் இணைப்பதன் மூலம் எதிர்கால மருத்துவ தேவைகளை எதிர்கொள்ள தகுதியான மருத்துவர்களை உருவாக்குவதே இந்த புதிய முயற்சியின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
வெறும் பொறியாளர்களை மட்டும் உருவாக்கும் நிலையிலிருந்து மாறி, மருத்துவர்களையும் உருவாக்கும் நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் உருவெடுக்கிறது என தெரிவித்துள்ள அவர், மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் மேம்பட்ட மருத்துவ உபகரணங்களின் பங்கு அதிகரித்து வரும் நிலையில், பொறியியல் அறிவும் மருத்துவத் திறனும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என தெரிவித்துள்ளார்.
ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள்ளேயே அல்லது ஒரு மருத்துவ கல்லூரியை நிறுவி, அதன் மூலம் இந்த மருத்துவ படிப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். ஐஐடியின் டெக் துறை கல்வி தரத்திற்கு ஏற்ப, மருத்துவ கல்வியிலும் ஆராய்ச்சி மற்றும் செய்முறை பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், இந்தத் திட்டமானது வெறும் பட்டங்களை வழங்குவது மட்டுமின்றி, மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, ஐஐடி மெட்ராஸ் தனது மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி துறையின் கீழ் பல புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வரும் ஐஐடி, அடுத்த கட்டமாக முழுநேர மருத்துவ பட்டங்களை வழங்க தயாராகி வருகிறது. இது மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா உலக அளவில் முன்னிலை பெற உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கான முறையான அனுமதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான பணிகளை ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஐஐடி போன்ற ஒரு முதன்மை தொழில்நுட்ப நிறுவனம் மருத்துவ கல்வியில் நுழைவது, இந்தியாவின் கல்வி முறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பொறியியல் தொழில்நுட்பத்தை மருத்துவத்தில் புகுத்துவதன் மூலம், குறைவான செலவில் அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகளை உருவாக்கவும், சுகாதாரத்துறையை மேம்படுத்தவும் முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
எனவே வருங்காலங்களில் ஐஐடியில் டெக் படிப்புகள் மட்டுமில்லாமல் மருத்துவ படிப்புகளுக்கான சீட் பெறவும் மாணவர்கள் மத்தியில் போட்டி நிலவும். மெட்ராஸ் ஐஐடி எடுக்கும் அனைத்து புது முயற்சிகளுமே வெற்றி பெறும் என்பதால் மருத்துவ படிப்பு திட்டமும் வெல்லும் என்றே சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications

