கரக்பூர், மேற்கு வங்கம்: கரக்பூரில் இருக்கும், ஐஐடி - இந்திய தொழில் நுட்பக் கழக கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள், உண்மையாகவே துவைத்து காய வைக்கும் துணியில் இருந்து மின்சாரத்தைத் தயாரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள்.
கல்லூரிக்கு அருகில் ஒரு கிராமத்தில், சலவைக்காரர்கள் தங்கள் துணிகளை வெளுக்கும் இடத்தில் இந்த சோதனையைச் செய்து இருக்கிறார்கள்.
சுமார் 3,000 சதுர மீட்டர் பரப்பில் ஈரமாக இருந்த துணிகளை, காய வைக்கும் போது 50 துணிகளைப் பயன்படுத்தி, மின்சாரத்தைத் தயாரித்து இருக்கிறார்கள்.
இயற்கையான சூழல்
ஈரமான துணிகளை இயற்கையான முறையில், வெயிலில் காய வைக்கும் போது துணிகளை ஒரு கமர்ஷியல் சூப்பர் கெப்பாசிட்டர் உடன் இணைத்து இருக்கிறார்கள். இப்படி 24 மணி நேர சோதனை வழியாக 10 வோல்ட் மின்சாரம் உற்பத்தி ஆனதாகச் சொல்கிறார்கள் அந்த ஐஐடி குழுவினர். இந்த 10 வோல்ட் மின்சாரத்தை வைத்து, ஒரு எல் இ டி விளக்கை 60 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாமாம்.
சுமன் சக்ரபர்த்தி
காய வைக்கும் துணிகளில் இருந்து கரண்ட் எடுத்ததைக் குறித்துப் பேசிய ஐஐடி கரக்பூர் கல்லூரியின், மெக்கானிக்கல் துறை பேராசிரியர் சுமன் சக்ரபர்த்தி "ஈரத் துணிகளில் இருந்து, மின்சாரத்தை தயாரிக்க முடியும் எனக் கண்டு பிடித்து, மின்சாரத்தை எடுக்கவும் ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டு பிடித்து இருக்கிறோம்." என பெருமையாகச் சொல்லி இருக்கிறார்.
மின்சாரம் இல்லா கிராமங்கள்
மேலும் "இப்படி, ஈரத் துணிகளை காய வைக்கும் போது மின்சாரம் தயாரிக்கும் வேலையை பெரிய அளவில் செய்ய முடியாது. ஆனால் இன்று வரை மின்சாரமே இல்லாத கிராமங்களுக்கும், கிராம வாசிகளின் வாழ்க்கையிலும், இது பல பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும்" என நம்பிக்கையாகச் சொல்கிறார் பேராசிரியர் சுமன் சக்ரபர்த்தி.
கிராமங்களை நோக்கி
இந்த கண்டு பிடிப்புகளை நிகழ்த்திய, கரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இந்த ஆராய்ச்சிக் குழு, ஈரத் துணி மூலம் மின்சாரத்தைத் தயாரிக்கும் திட்டத்தை, இந்தியாவில் மின்சாரமே கிடைக்காத அல்லது மின்சாரம் கிடைப்பதில் சிரமம் இருக்கும் கிராமங்களில் செயல்படுத்தப் போகிறார்களாம். கிராம புற மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற இருக்கும் ஆராய்ச்சி குழுவினருக்கு நம் வாழ்த்துக்கள்.