டெல்லி : சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சித் துறை இயக்குநருமான கீதா கோபிநாத், கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் கீதா கோபிநாத்துடன் பிரதமர் மோடியுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார மந்தநிலையில் நிச்சயமற்ற பல நிகழ்வுகள் உள்ளதாகவும், அது தற்போதைய வீழ்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்று கடந்த வெள்ளிக்கிழமை கீதா தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
சீர்திருத்தங்கள் முக்கியம்
இந்திய பொருளாதார மந்த நிலையில் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்று நம்புகிறேன். இது கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய காரணியாகும். சீர்திருத்தங்களை மேற்கொள்வது இந்தியாவுக்கு முக்கியம் தான். ஆனால் அதைவிட முக்கியம் அதிக தெளிவுடனும் அதிக உறுதியுடனும் செய்ய வேண்டும் என்று FICCI-யின் 92வது மாநாட்டில் பேசிய கீதா கோபிநாத் கூறியிருந்தார்.
ஜிஎஸ்டி முக்கிய பங்கு
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சரக்கு மற்றும் சேவை வரியை முறைபடுத்துவதிலும் பங்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள இண்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் -அமைப்பில் தலைமை பொருளாதார நிபுணராக உள்ளவர் தான் கீதா கோபிநாத். இவர் அமெரிக்காவில் இருந்தாலும் அவ்வப்போது இந்தியாவின் வளர்ச்சி நிலை குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போதிய முதலீடுகள் இல்லை
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநராக இருக்கும் இவர், கடந்த டிசம்பர் 20ம் தேதி இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் (FICCI-) ஆண்டு விழாவில் கலந்து கொண்டபோது, தற்போதைய இந்திய பொருளாதாரம் பற்றி பேசினார். அதில் கடந்த சில காலாண்டுகளாகவே இந்தியாவில் தனியார் நுகர்வு குறைந்து வருவதாகவும், மேலும் முதலீடுகளும் போதிய அளவில் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஆலோசனை
இந்தியா தற்போதைய பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள்வதற்கு நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கீதா கோபிநாத் சந்தித்துள்ளார். மோடி - கீதா கோபிநாத் சந்தித்த புகைப்படத்தைப் பிரதமர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சந்திப்பில் என்ன பேசினார்?
கீதா கோபிநாத் பிரதமர் நரேந்திரமோடியிடம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து குறைந்து வரும் தனியார் நுகர்வும், முதலீடுகளும், வரி வருவாயும் தொடர்ந்து குறைந்து வருவதால் அதை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
வளர்ச்சி மதிப்பீடு குறைப்பு
2019ஆம் ஆண்டில் இந்தியா 7 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் இந்திய பொருளாதாரம் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் வெறும் 6.1 சதவிகித வளர்ச்சியை மட்டுமே இந்தியா கொண்டிருக்கும் என்று கூறியது.
மோசமான வீழ்ச்சி
கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக 4.5 சதவிகிமாக வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் உட்பட பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி நிலை குறித்த தங்களது மதிப்பீடுகளைக் குறைத்து வருகின்றன.
மேலும் குறைக்கப்படலாம்
இந்த நிலையில் முந்தைய வளர்ச்சி மதிப்பீடானது வரும் ஜனவரியிலும் குறைக்கப்படலாம் என்றும் கீதா அந்த மாநாட்டில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நிதிப்பற்றாக்குறையை இலக்காக வைத்திருப்பது முக்கியம் அல்ல, ஆனால் வருவாயை திரட்டுவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் எச்சரித்திருந்தார்.
வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்க வரியை குறைத்தால் மட்டும் போதாது, வருவாயை பெருக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என நெற்றியில் அடித்தாற்போல் கேட்டிருந்தார். மேலும் நிலவி வரும் மந்த நிலையில் தொடர்ந்து நுகர்வானது குறைந்து வருகிறது. ஆக மக்களின் நுகர்வை அதிகரிக்க வேண்டும். இதற்காக பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். தற்போது போதிய பணப்புழக்கம் இல்லை என்றும் கூறியிருந்தார்.
கடன் வாங்க ஆளில்லை
கீதா கோபிநாத் கூறியது ஒரு வகையில் உண்மை தான் என்று கூட சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்பிஐ தலைவர் கடன் கொடுக்க நாங்க ரெடியாகத் தான் இருக்கிறோம், ஆனால் கடன் வாங்கத் தான் ஆளில்லை என்றும் கூறியிருந்தார். எனினும் வங்கி அல்லாத நிதி நிருவனங்களில் நிலவி வரும் பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா.
நடவடிக்கை இருக்குமா?
எப்படியோங்க. பிரதமர் மோடியை சந்தித்த கீதா நிச்சயம் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க, தனது வியூகத்தை சொல்லி இருக்கலாம். இதனை மனதில் கொண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் சரி தான். இனியும் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் இருக்க வேண்டும். அதற்காக அரசு விரைந்து இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுகோள்.