கோதுமை ஏற்றுமதி மீதான தடையை விரைவில் இந்தியா மறுபரிசீலனை செய்து நீக்கவோ அல்லது தளர்த்தவோ வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வலியுறுத்தியுள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதி நாடான ரஷ்யா உக்ரைன் போரில் சிக்கியுள்ள காரணத்தால் உலக நாடுகளில் கோதுமை தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் துருக்கி உட்படப் பல நாடுகள் இந்தியாவிடம் கோதுமை ஆர்டர் செய்தது.
ஏற்கனவே இந்தியாவில் கோதுமை உற்பத்தி குறைந்த காரணத்தாலும், ஏற்றுமதி ஆர்டர்கள் குவிந்த காரணத்தாலும் இந்தியாவில் இதன் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.
கிறிஸ்டலினா ஜார்ஜீவா
சுவிஸ் நாட்டின் டாவோஸ்-ல் நடந்த உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தில் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இந்தியா கிட்டத்தட்ட 1.35 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க வேண்டும், இதேவேளையில் வெப்பத்தின் காரணமாக விவசாய உற்பத்தியைக் குறைத்துள்ளது என்பதும் புரிகிறது. ஆனாலும் நான் இந்தியாவைக் கூடிய விரைவில் கோதுமை ஏற்றுமதி தடை குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கிறிஸ்டலினா பேசினார்.
நெருக்கடி
ஏனென்றால் அதிகமான நாடுகள் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கும் போது, மற்ற நாடுகளும் விலைவாசியைக் குறைக்க இத்தகைய நடவடிக்கையை எடுக்கக் கூடும். அப்படிச் செய்தால் உலக நாடுகளில் உருவாகியுள்ள நெருக்கடிகள் சமாளிப்பது மிகவும் கடினமாகிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
கோதுமை ஏற்றுமதி
மத்திய அரசு கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்தாலும் வெளிநாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய அரசு வழங்கும் அனுமதியின் அடிப்படையில் மற்றும் அவர்களின் அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் கோதுமை ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனியார்களின் கோதுமை ஏற்றுமதி மட்டுமே பாதித்துள்ளது.
ஜி7 நாடு
ஜி7 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்யும் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தனர். "எல்லோரும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினால் நெருக்கடியை மோசமாக்கும்" என்று ஜெர்மன் விவசாயத் துறை அமைச்சர் செம் ஓஸ்டெமிர் கூறியது குறிப்பிடத்தக்கது.