எங்கும் கொரோனா வைரஸ், எதிலும் கொரோனா வைரஸ். உலகமே கொரோனா பயத்தில் மிரண்டு போய் இருக்கிறது.
மனிதர்களின் உயிர் முதல் உடைமைகள் வரை எல்லாமே கொரோனா வைரஸால் பறி போகத் தொடங்கி இருக்கிறது என்று நிச்சயம் சொல்ல முடியும்.
உள் நாட்டு வர்த்தகம் தொடங்கி, உலக வர்த்தகம் வரை எல்லாமே பெரிய தேக்கத்தில் நிற்கிறது.
IMF கருத்து
சர்வதேச பன்னாட்டு நிதியமான IMF அமைப்பின் திட்டக் கொள்கைத் துறைத் தலைவர் மார்டின் முஹ்லிசன் (Martin Muehleisen) கொரோனா வைரஸால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகள் மற்றும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என விரிவாகப் தன் கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அதைத் தான் பார்க்க இருக்கிறோம்.
பொருளாதாரம் பாதிப்பு
உலக அளவில் சுமார் 2.54 லட்சம் பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 10,451 பேர் இறந்து இருக்கிறார்கள். இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளால், உலகம் முழுக்க சப்ளை மற்றும் தேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சப்ளை மற்றும் தேவை பாதிப்பு நிதித் துறையில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.
நிதி நிறுவனங்கள் பலம்
கடந்த 2008 - 09 பொருளாதார நெருக்கடி கால கட்டத்தில், உலக அளவில் நிதி நிறுவனங்கள் இருந்த நிலையை விட, தற்போது வலுவாக இருக்கிறது. நிலையான வளர்ச்சி மற்றும் நிறைய புதிய வேலை வாய்ப்புகள் தான், இந்த அதிர்வுகளைத் தாங்க முடியும் எனவும் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் மார்டின்.
நாம் ரெடி
நாம் தயாராக இருக்கிறோம் என கருதும் நேரத்தில் தான், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு வந்து இருக்கிறது. இருப்பினும், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும், விளைவுகள் எல்லாம், கொஞ்சம் கடுமையாகத் தான் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார் மார்டின்.
ஐ எம் எஃப் நடவடிக்கை
இந்த பொருளாதார பிரச்சனைகளைச் சமாளிக்க, வளரும் சந்தைகளில் இருந்து வெளியேறும் முதலீடுகளைச் சமாளிக்க, 0 % வட்டி விகிதத்தில் கடன் அல்லது மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அல்லது மானியம் வழங்குவது என பல திட்டங்களை ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
கமாடிட்டி விலை சரிவு
மேலே சொன்னவைகள் எல்லாம் போக உலக அளவில் கமாட்டிக்களின் விலை, குறிப்பாக கச்சா எண்ணெய் விலை பயங்கரமாக சரிந்து இருக்கிறது. இது பல நாடுகளுக்கு பெரிய சவாலாகவும், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு வரப் பிரசாதமாகவும் இருக்கிறது எனவும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.
ஒருங்கிணைப்பு தேவை
ஏற்கனவே வங்கிகள் மற்றும் அரசாங்கங்கள், சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க, நிறைய நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்கள். தேவைக்கு அதிகமாகவே நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்கள் என சொல்லலாம். ஆனால் இந்த நடவடிக்கைகளை சர்வதேச அளவில் இன்னும் ஒருங்கிணைக்கப் படவில்லை. இவை எல்லாம் சர்வதேச அளவில் ஒருங்கிணைத்தால் தான் பலன்கள் பன் மடங்கு பெருகும் எனச் சொல்லி இருக்கிறார் மார்டின்.
நோய் கட்டுப்பாடு தேவை
இந்த கொரோனா வைரஸை கூடிய விரைவில், எல்லோரும் ஒருங்கிணைந்து, கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான், மக்கள் மத்தியில் நம்பிக்கை மீண்டு வரும் எனவும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார். ஆக இப்போதாவது, உலக நாடுகள் தங்கள் பிரச்சனைகளை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, கொரோனாவுக்கு தீர்வு காண வேண்டும்.