மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையை வெளியிடத் தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில் சர்வதேச நாணய நிதியம் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி அளவீட்டைக் குறைத்துள்ளது.
ஐஎம்எப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் 31 உடன் முடியும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணித்துள்ளது.
முக்கியமான காரணம்
இந்தப் பொருளாதார வளர்ச்சி குறைப்பிற்கு மிகவும் முக்கியமான காரணமாக இந்தியாவில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று மற்றும் அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் ஆகியவற்றின் மூலம் ஏற்பட்ட வர்த்தகம், பொருளாதாரம் பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது ஐஎம்எப் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி அளவீட்டைக் குறைத்துள்ளது.
ஐஎம்எப் அமைப்பு
ஐஎம்எப் அமைப்பு அக்டோபர் மாதம் 2021-22 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்து இருந்தது, ஆனால் தற்போது 9 சதவீதமாகக் குறைத்துள்ளது. மேலும் 2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என ஐஎம்எப் கூறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பு
2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் கொரோனா தொற்று லாக்டவுன் ஆகியவற்றின் மூலம் -7.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான IMF இன் கணிப்பு, மத்திய அரசின் மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்த 9.2 சதவீதத்திற்கும், இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ள 9.5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
உலக வங்கி கணிப்பு
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2021-இல் 5.5 சதவீதமாக இருந்த சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீடு 2022 இல் 4.1 சதவீதமாகக் குறையும், இதைத் தொடர்ந்து 2023 இல் 3.2 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா, ஒமிக்ரான்
கொரோனா வைரஸ் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இது கொரோனா பாதிப்பு போல் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், பொருளாதார வளர்ச்சி அளவீட்டைக் கடுமையாகப் பாதிக்கும் என உலக வங்கி சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.