இந்தியாவில் நிலவிக் கொண்டு இருக்கும் பொருளாதார மந்த நிலை, பார்ப்பதற்கு தற்காலிகமானதாகத் தான் தெரிகிறது என, சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக இருக்கும் கிரிஸ்டலினா ஜார்ஜிவா (Kristalina Georgieva) இன்று சொல்லி இருக்கிறார்.
அதோடு ஆசிய நாடுகளான இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற பொருளாதாரங்கள் நல்ல வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். ஆசிய நாடுகள் போல, சில ஆப்பிரிக்க நாடுகள் கூட பொருளாதார ரீதியாக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
இந்திய பொருளாதாரத்தின் மொமெண்டம் போக போக அதிகரிக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் சொல்லி இருக்கிறார் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா (Kristalina Georgieva). இந்த கருத்துக்களை உலக பொருளாதார ஃபாரம் 2020 கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
அதோடு கடந்த அக்டோபர் 2019-ல் சர்வதேச பன்னாட்டு நிதியம், உலக பொருளாதார அவுட் லுக்கை வெளியிட்ட போது இருந்ததை விட, தற்போது ஜனவரி 2020-ல் உலகம் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.
உலகில் பொருளாதார மந்த நிலை மாறி, ஒரு வேகம் எடுப்பதற்கு, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் பொருளாதார சக்திகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் ஒரு சுமூகமான முடிவுக்கு வருவது, வரி விகிதங்களைக் குறைத்து இருப்பது போன்றவைகள் முக்கிய காரணங்களாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். இருப்பினும் பொருளாதாரம் வெறும் 3.3 சதவிகிதம் வளர்ச்சி காண்பது உலக பொருளாதாரத்துக்கு பெரிய விஷயம் ஒன்றும் இல்லை எனவும் சொல்லி இருக்கிறார்.
இன்னும் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் தான் இருக்கிறது. நிறைய வரி மற்றும் செலவீனங்கள் சார்ந்த கொள்கை மாற்றங்கள் அதிரடியாக இருக்க வேண்டும். நமக்கு கொள்கை சீர் திருத்தங்கள் தேவை, அதுவும் மிகவும் அதிரடியாகத் தேவை எனச் சொல்லி இருக்கிறார் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா (Kristalina Georgieva).
சர்வதேச பன்னாட்டு அமைப்பில் இருந்தே ஒருவர், இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது தான் எனச் சொல்லிய வார்த்தைகள் நமக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுக்கிறது.