2020-ம் ஆண்டு மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது. இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று நம்மில் பலரும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், வல்லரசாக இருக்கும் அமெரிக்கா கூட கொரோனா வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற முடியாமல் தவிப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் கொரோனா வைரஸையே யாரும் எதிர்பார்க்கவில்லையே!
எல்லா நாடுகளும் கொரோனா வைரஸ் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். கொத்து கொத்தாக மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், பொருளாதாரம் அதள பாதாளத்துக்குச் சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சில தசாப்தங்களாக வளர்த்து எடுத்த பொருளாதார வளர்ச்சி எல்லாம் ஒரு சில வாரங்களில் கண் முன்னே காணாமல் போய்விட்டது. இப்போது இந்தியாவுக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி செய்தியைத் தான் சொல்லி இருக்கிறது சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF).
இந்தியா, இந்த 2020-ம் ஆண்டில் 4.5 சதவிகிதம் வரை பொருளாதார வீழ்ச்சி காணலாம். ஆனால் அடுத்த 2021-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவிகிதம் வளர்ச்சி காணலாம் எனச் சொல்லி எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் இயங்க முடியாமல் இருந்ததை காரணமாகச் சொல்கிறது சர்வதேச பன்னாட்டு நிதியம். சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் இந்த 4.5 சதவிகித பொருளாதார சரிவுக் கணிப்பு, 1961-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு கணித்து இருக்கும் மிகக் குறைந்த கணிப்பு எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
உலகிலேயே முதல் முறையாக, உலகின் அனைத்து பிராந்தியங்களும், பொருளாதார ரீதியாக வீழ்ச்சி காண்பது இதுவே முதல் முறையாம்.
கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க, பல்வேறு நாடுகளும் கடுமையான லாக் டவுனை அறிவித்தன. இந்த கொரோனா வைரஸுக்கான லாக்டவுனும் பலனளித்தது. ஆனால், மறு பக்கம் பொருளாதார் ரீதியாக மிகப் பெரிய பாதிப்புகளையும், மோசமான ரெசசனையும் கிளப்பிவிட்டு இருக்கிறது இந்த லாக் டவுன். இது அமெரிக்காவில் நடந்த 1929 க்ரேட் டிப்ரஷனுக்குப் பிறகு உலகம் சந்திக்கும் மிகப் பெரிய ரெசசன் எனச் சொல்லி இருக்கிறார் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் கீதா கோபிநாத்.