டெல்லி: சர்வதேச நாணய நிதியம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 12.5% வளர்ச்சி காணும் என்றும் கணித்துள்ளது.
இது முன்னர் 11.5% ஆக வளர்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தற்போது பல நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தற்போது இரண்டாம் கட்ட பரவல் காரணமாக பல இடங்களில் லாக்டவுன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த கணிப்பு பொருளாதாரம் சீரான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதையே காட்டுகிறது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியாவில் லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வளர்ச்சி விகிதம் நன்றாக வந்து கொண்டுள்ளது. வளர்ச்சி குறித்தான குறியீடுகளும் சாதகமாக வந்து கொண்டுள்ளன. இதற்கிடையில் தான் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த திருத்தம் வந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதர நிபுணர் கீதா கோபிநாத் கூறுகையில், அதிகளவு நிச்சயமற்ற தன்மை கணிப்புகளைச் சூழ்ந்துள்ளது. எனினும் தடுப்பூசிகள் விரைவான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகாரித்தால் அதுவும் பொருளாதாரத்தினை தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மீட்புக்குண்டான வாய்ப்புகளை மோசமாக்கலாம். குறிப்பாக சில வளர்ச்சியடைந்த சந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கும் என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளார். அதோடு நடப்பு நிதியாண்டிற்குள் வளரும் நாடுகளில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்பது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆக இந்தாண்டின் முடிவுக்குள் கொரோனாவை விரட்ட முடியுமா என்ற கேள்வியும் வந்துள்ளது.
கடந்த 1930-ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தம் தான் கடந்த ஆண்டு வரை மிக மோசமான நிலையாக கருதப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டில் கொரோனா லாக்டவுன் காரணமாக அதையெல்லாம் விட மிக மோசமான சரிவினை சந்தித்தது இந்தியா. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி விகிதம் குறித்து பல சாதகமான அறிவிப்புகளை நிபுணர்கள் கணித்து வரும் நிலையில், ஐஎம்எஃப்பின் கணிப்பும் சாதகமாக வந்துள்ளது. இது உண்மையில் நல்ல விஷயம் தான்.