இந்திய பொருளாதாரம் குறிப்பிடத் தகுந்த மந்த நிலையில் இருப்பதாகவும், அதனை நீக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் இந்தியா சமீப காலமாக வளர்ச்சியை கூட்டுவதற்கான, முறைசார் தொழில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை.
நுகர்வு மற்றும் முதலீடு குறைந்து வருவது, வரி வருவாய் வீழ்ச்சியடைதல் உள்ளிட்ட பல காரணிகள், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவின் மந்த நிலையை அதிகரிக்கின்றன.
வேலையின்மை அதிகரிப்பு
கடந்த திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், சமீபத்திய தொழிலாளர் சந்தை தரவுகளின் படி வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது. அதே நேரம் வேலைக்கு பங்களிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. குறிப்பாக பெண்களின் பங்களிப்பு இதில் மிக அதிகமாக அதிகரித்துள்ளது.
முதலீடு குறைவு
இதே போல் நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின்மையால் இந்தியாவின் இளம் தலைமுறையினரின் சக்திகள் வீண்டிக்கப்படும் அபாயம் நிலவி வருகிறது என்றும் ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது. மேலும் அரசு கட்டுப்பாடுகளில் நிச்சயமற்ற தன்மையே நிலவி வருவதால் முதலீடும் குறைந்துள்ளது. மேலும் நுகர்வு வெகுவாக குறைந்துள்ளது.
பொருளாதார தேக்க நிலைக்கு வழிவகுப்பு
இது குறித்து ஐஎம்எஃப்பின் இந்திய தலைவர் ரணில் சல்காடோ கூறுகையில், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் அளவு வீழ்ச்சி, கடன் வழங்குவதில் உள்ள பரந்த வீழ்ச்சி, ஜிஎஸ்டி வரியில் உள்ள குறைகள் உள்ளிட்ட பல காரணங்கள் பொருளாதார தேக்க நிலைக்கு பங்களிப்பு செய்கின்றன. இதனால் இந்த ஆண்டு இந்தியா குறிப்பிடத்தக்க கணிசமான அளவு பொருளாதார சரிவில் சிக்கியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டிலும் வீழ்ச்சி காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கைகள்
இதனால் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதே சமயம் கார்ப்பரேட் வரி குறைப்பினால் வரி வருவாய் குறைந்துள்ளது, இது இந்தியாவின் வளர்ச்சியை மேலும் பின்னோக்கி செலுத்துகிறது. இதனால் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் வரையில் நிதிக் கொள்கையில் விதிகள் தளர்த்தப் பட வேண்டும்.
என்ன சொல்லி இருக்கிறார் கீதா கோபிநாத்
எப்படி எனினும் இந்தியாவின் வளர்ச்சியை தூண்டுவதற்கு தேவையை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக கடன் வழங்குதலை அதிகரிக்க வேண்டும். இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையில் எதிரொலி இந்தியாவிலும் காணப்படுகிறது. ஆக வரவிருக்கும் காலங்களில் அதன் பொருளாதார வளர்ச்சி பற்றிய அவுட்லுக்கை கணிசமான அளவு வீழ்ச்சி காணும் என்றும் கூறினார்.
மதிப்பீடு குறைப்பு
கடந்த அக்டோபரில் நடப்பு 2019ம் நிதியாண்டிற்கான வளார்ச்சி 6.1 சதவிகிதமாகக் குறைத்தது. இதே 2020க்கான அதன் பார்வையை 7 சதவிகிதமாகவும் குறைத்தது. இந்த நிலையில் பொருளாதார மந்த நிலை மீண்டும் தொடர்ந்தால், மத்திய வங்கி வட்டி குறைப்பு செய்ய இடமுண்டு என்றும் சல்கடோ கூறியுள்ளார். ஏற்கனவே 5 முறை வட்டி குறைப்பு செய்து ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளது. எனினும் கடைசியாக நடந்த கூட்டத்தில் வட்டி குறைப்பு செய்யவில்லை.
ஜிடிபி வீழ்ச்சி
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாத காலாண்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் அரசாங்கம் இந்த பிரச்சனைகளில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க விரைவில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக நிதித்துறையின் ஆரோக்கியத்தை புத்துயிர் பெற செய்ய வேண்டும் என்றும் சல்கடோ கூறியுள்ளார்.