கொரோனாவின் கோரத் தாண்டவம் தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஏழை நாடுகள் வாங்கிய கடனுக்கான தவணையைத் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த நிதியை கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த முடிவு பல ஏழை நாடுகளுக்குப் பெரிய அளவில் உதவும்.
மக்கள் தொகை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் அதிகமாகவும், வேகமாகவும் பரவுகிறது. இதற்கான மருந்தும் இல்லை என்ற சூழ்நிலையில் இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது இன்று விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.
உலக வங்கி மற்றும் ஐஎம்எப்
உலக வங்கி மற்றும் சர்வதேச பன்னாட்டு நிதியம், கடன் கொடுத்து இருக்கும் அனைத்து நாடுகளையும், தற்காலிகமாக, கடன் வாங்கி இருக்கும் நாடுகள் செலுத்த வேண்டிய கடன் தொகைகளை ரத்து செய்யச் சொல்லிக் கேட்டு இருக்கிறது. இதை உடனடியாகவும், கடன் கொடுத்து இருக்கும் அனைத்து நாடுகளின் சட்டத்துக்கு உட்பட்டு செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.
மக்கள் தொகை
மேலும் உலகின் மொத்த மக்கள் தொகையில் 3இல் 2 பங்கு மக்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் நிலையில் அவர்களுக்கான சுகாதார மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து தடுக்கும் முயற்சியாக IDA நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்புகளும் சரி, அரசுகளும் சரி கொரோனா பாதிப்பைக் குறைக்கப் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொடர்ந்து அதிகரித்துத் தான் வருகிறது.
இந்தியா
அதிக மக்கள் தொகை இருக்கும் இந்தியாவில் கொரோனா 2வது கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், அதை 3வது கட்டத்திற்குச் செல்வதைத் தடுக்கு மத்திய மாநில அரசுகள் அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் மக்கள் அதை யாரும் பொருட்படுத்தாமல் இயல்பாக உள்ளனர். இதன் வீரியத்தை உணர்ந்தால் தான் நம் நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியும்.
உலக நாடுகளின் நிலைமை
சீனாவில் 81,285 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3,287 பேர் கொரோனாவிற்குப் பலி ஆனார்கள், ஆனால் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பின் அவர்கள் மீண்டுவிட்டனர். ஆனால் 3வது கட்டத்தை மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள் கடந்துவிட்ட இத்தாலியில் தற்போது 74,386 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,503 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் 68,367 பேர், ஸ்பெயினில் 49,515 பேர், ஜெர்மனியில் 37,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவையும், இந்தியா மக்களையும் காப்பாற்றுவது நம் கையில் மட்டும் தான் உள்ளது.