இந்திய பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் -7.5 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2 காலாண்டுகளாக அதாவது ஜூன் காலாண்டைத் தொடர்ந்து செப்டம்பர் காலாண்டிலும் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி பாதையிலேயே இருக்கும் காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் வரலாற்றிலேயே முதல் முறையாக பொருளாதார மந்தநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
கொரோனாவால் இந்திய மக்களும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள இந்தச் சூழ்நிலையில் இந்திய பொருளாதாரம் வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு பயப்பட வேண்டுமா..?
பொருளாதார மந்தநிலை
எந்தொரு நாடாக இருந்தாலும் பொருளாதார மந்தநிலை (ரிசஷன்) ஏற்பட்டால் அதிகளவிலான வேலைவாய்ப்பின்மை, மக்களின் சராசரி வருமானத்தில் சரிவு, அதிகளவிலான வித்தியாசம், அரசின் கடன் அளவில் தடாலடி உயர்வு எனப் பல பாதிப்புகள் உருவாகும். ஆனால் இது ஒவ்வொரு தருணத்திற்கும் மாறுபடும்.
குறிப்பாக 2009ஆம் ஆண்டு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்குப் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.
2009 பொருளாதார மந்தநிலை
2009ஆம் ஆண்டு அமெரிக்கா வங்கிகள் திவாலானது மூலம் உலகமும் முழுவதும் இருக்கும் வங்கிகள் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டது. இதனால் உலகம் முழுவதும் White Collar வேலைவாய்ப்புகளில் இருந்து மக்கள் அதிகளவிலானோர் வேலையை இழந்தனர். குறிப்பாக வெளிநாட்டு வங்கிகள், வங்கி சேவையில் இருக்கும் 3ஆம் தரப்பு நிறுவனங்கள், ஐடி துறை ஊழியர்கள் இக்காலகட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
2020 பொருளாதார மந்தநிலை
ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை முற்றிலும் மாறுபட்டது. கொரோனாவால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு அதிகளவில் குறைவான வருமானத்தைக் கொண்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாத அனைத்து ஊழியர்களுக்கும் வருமானத்தில் சரிவு அல்லது வேலைவாய்ப்பு இழப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
அரசு உதவி
இந்தப் பாதிப்புகளும் அரசு எந்த அளவிற்குக் குறைவான வருமானத்தைக் கொண்ட மக்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைப் பொறுத்தே முற்றிலும் அமையும்.
இதேபோல் பல நாடுகள் இந்தக் கொரோனா காலகட்டத்தில் வேலைவாய்ப்பை இழந்த மக்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. அதுவும் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும்.
வேலைவாய்ப்பு விகிதம்
பொதுவாக பொருளாதார மந்தநிலை காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவில் வேலையின்மை தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இது நவம்பர் 22வுடன் முடிவடைந்த வாரத்தில் 7.8 சதவீதமாகவும், இதே தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 39.3 சதவீதமாகவும் உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக வேலைவாய்ப்பு விகிதம் 36.24 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது தொழிலாளர் சந்தையை மேலும் பலவீனப்படுத்துகிறது.
ரியல் எஸ்டேட் வீழ்ச்சி
இதேபோல் பொருளாதார மந்தநிலை காலத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவிலான வீழ்ச்சி அடையும், ஆனால் இந்தியாவில் தற்போது பில்டர்கள் மற்றும் குறைவான வீட்டு கடன் வட்டி காரணத்தால் ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் பெரிய அளவில் வீழ்ச்சி அடையாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.
உற்பத்தி
மேலும் பொருளாதார மந்தநிலை காலத்தில் நாட்டின் உற்பத்தி அளவீடுகள் மோசமான நிலையை அடையும் அந்த வகையில் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் முக்கியமான 8 உற்பத்தி துறையில் கச்சா எண்ணெய் துறை மற்றும் அதைச் சார்ந்துள்ள துறைகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்துள்ளது.
நிலக்கரி: 11.6 சதவீதம்.
கச்சா எண்ணெய்: - 6.2 சதவீதம்.
இயற்கை எரிவாயு: - 8.6 சதவீதம்.
சுத்திகரிப்புப் பொருட்கள்: - 17.0 சதவீதம்.
உரங்கள்: 6.3 சதவீதம்.
எஃகு: - 2.7 சதவீதம்.
சிமென்ட்: 2.8 சதவீதம்.
மின்சாரம்: 10.5 சதவீதம்.
அரசு வருமானம்
பொருளாதார மந்தநிலை காலத்தில் அரசின் வருமானம் அதிகளவில் பாதிக்கப்பட்டு நாட்டின் நிதிப் பற்றாக்குறை அளவீடு அதிகரிக்கும். செப்டம்பர் காலாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அளவான 7.96 லட்சம் கோடி ரூபாய் இலக்கு இந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை அளவு 119.7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
நிறுவனங்கள் திவால்
பொருளாதார மந்தநிலை காலத்தில் நிறுவனங்கள் திவால் ஆவது மிகவும் முக்கியமான ஒன்று, இந்தியாவில் தற்போது பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கும் காரணத்தால் நிறுவனங்கள் மூடப்படும் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் பல நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன்
தற்போதைய நிலையில் இந்தியாவில் வேலைவாய்ப்பு தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் சில வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 3வது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் பல முக்கியமான அறிவிப்புகளை அறிவித்தார்.
ஊரக வளர்ச்சி
கொரோனா பாதிப்பால் உற்பத்தி மற்றும் சேவை துறை மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் பருவமழை சிறப்பாக இருப்பதாலும், கொரோனா காலத்தில் இந்திய கிராமங்கள் மற்றும் சிறிய டவுன் பகுதிகளில் வர்த்தகப் பாதிப்புகள் குறைவாத இருந்த காரணத்தால் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் பெரும்பாலான வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஊரக வளர்ச்சியைச் சார்ந்து இருந்தது.
MGNREGA திட்டம்
இந்திய கிராமங்களில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியை உருவாக்கி வரும் MGNREGA திட்டத்திற்கு 73,504 கோடி ரூபாய் அளவிலான நிதி அளித்துள்ளது. இதன் மூலம் 251 கோடி பேருக்கான ஒருநாள் வேலைக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார் நிதியமைச்சர்.
PM Garib Kalyan Rozgar Yojana திட்டம்
இந்தியா முழுவதும் 116 மாவட்டங்களில் ஊரக மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக PM Garib Kalyan Rozgar Yojana திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு இதுநாள் வரையில் சுமார் 57,543 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுப் பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
கிஷான் கிரெடிட் கார்ட்
பருவமழை சிறப்பாக இருக்கும் காரணத்தால் மத்திய அரசு கிஷான் கிரெடிட் கார்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்குக் கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார், இதனால் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட்
நகரப்புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்காகவும், PMAY திட்டத்திற்கு 18,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததன் மூவம் இந்தியாவில் சுமார் 12 லட்சம் வீடுகள் புதிதாகக் கட்ட துவங்கவும், 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படவும் முடியும். இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடு காரணமாகச் சுமார் 78 லட்சம் வேலைவாய்ப்புகள் ரியல் எஸ்டேட் துறையில் உருவாக முடியும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
PLI திட்டம்
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த Production Linked Incentives திட்டத்தின் கீழ் 10 முக்கியமான துறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் நன்மை அடைவது மட்டும் அல்லாமல் உற்பத்தித் துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும்.