இந்தியாவில் தற்போது 44 சட்டங்கள் தொழிலாளர், வேலை வாய்ப்பு மற்றும் வேலை நிலைமைகளை நிர்வகிக்கின்றன. இது சம்பளம், சமூக பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழில் பாதுகாப்பு, ஊதியங்கள் மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலன், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் தொழில் துறை உறவுகள் என பலவற்றையும் கையாளுகின்றன.
இவற்றில் 29 சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி மத்திய அரசு ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது ஊதிய சட்ட தொகுப்பு - 2019, தொழில் உறவு சட்ட தொகுப்பு - 2020, சமூகப் பாதுகாப்பு சட்ட தொகுப்பு - 2020, பணியிட பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் பணி நிலைகள் சட்ட தொகுப்பு - 2020 என்று வகுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வேலை நேரத்தில் என்ன மாற்றம் இருக்கலாம். விடுமுறையில் என்ன மாற்றம் வரலாம்.
வேலை நேரம்
அரசின் இந்த தொழிலாளர் சட்டத்தினால் தினசரி மற்றும் வாரத்தில் பணி நேரம் 12 மற்றும் 48 மணி நேரமாக இருக்கலாம். இது வாரத்தில் 4 நாள் பணி என்ற நிலையில் இருக்கலாம். இது வேலை நேரத்தினை அதிகரிக்கலாம். ஆனால் வார விடுமுறையினை அதிகரிக்கலாம்.
வருடாந்திர விடுமுறை
ஆனால் ஓராண்டில் 180 நாட்கள் பணி செய்திருந்தாலே புதிய ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்பட உள்ளது.
எனினும் இந்த விதிகள் கட்டாயம் அல்ல. நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படுத்தலாம். புதிய தொழிலாளர் சட்டங்கள், நாட்டில் முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என மத்திய அரசு கூறுகிறது.
சமூக பாதுகாப்பு
புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, டேக் ஹோம் சம்பளம் குறையும். அதேசமயம் வருங்கால வைப்பு நிதி அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் மொத்தத்தில் 50% ஆக இருக்க வேண்டும் என்ற நிலையில், கிராஜ்விட்டியும் அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது கிராஜ்விட்டியும் அதிகரிக்கும். ஏனெனில் ஒவ்வொரு வருட சேவைக்கும் கடைசியாக கொடுக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தின் 15 நாட்களுக்கு சமமான தொகையாக நிறுவனங்கள் கிராஜ்விட்டியாக கொடுக்கும். ஆக அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் என்பதால், இந்த கிராஜ்விட்டி தொகையும் அதிகரிக்கும்.
கிராஜ்விட்டில் பெரும் மாற்றம்
புதிய தொழிலாளர் சட்டங்களில் கிராஜ்விட்டியிலும் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே இருந்த விதிகளின் படி 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, 1 ஆண்டு பணிபுரிந்தாலே கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆக இதனால் பெரும்பாலான ஊழியர்கள் பயன்பெறுவர்.
எப்போது முதல்?
இந்த சட்டங்கள் மத்திய அரசால் இயற்றப்பட்டு ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக இவ்வளவு நல்ல விஷயங்களுக்கு மத்தியில் தான் இந்த 4 தொழிலாளர் மசோதாக்கள் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகின்றன. எனினும் இது அமல்படுத்தப்பட்ட பின்னர் தான் முழுமையான விவரம் என்ன என்பது தெரியவரும்.