சர்வதேச அளவில் உலகின் மிகப்பெரிய பரபரப்பான நீர்வழிப் வர்த்தக பாதைகளில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாயில், கடந்த வாரத்தில் 2,00,000 லட்சம் டன்னுக்கு மேல் எடையுள்ள ராட்சத கப்பல் ஒன்று தரைதட்டியது.
உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12% இந்த கால்வாய் வழியாக நடைபெறுகிறது. அந்தளவுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நீர்வழிப்போக்குவரத்து ஆகும்.
இப்படிப்பட்ட பரப்பரப்பான ஒரு வர்த்தக போக்குவரத்து கப்பல்கள் செல்லும், சூயல் கால்வாயில் தான் டிராபிக் ஜாம்.
தரை தட்டிய எவர் கிவன்
பனாமாவில் பதிவுசெய்யப்பட்ட எவர்கிரீன் என்ற நிறுவனத்தால் இயக்கப்படும் எவர் கிவன் (Ever Given) என்ற கப்பல் தான் தற்போது மாட்டிக் கொண்டுள்ளது. இந்த கப்பலின் நீளம் மட்டும் 400 மீட்டராகும். இதன் அகலம் 59 மீட்டராகும். உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் வழிப் போக்குவரத்து பாதையாக உள்ள இந்த சூயஸ் கால்வாய், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நீர்வழிப் பாதையாகும். குறிப்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான மிக குறுகிய கடல் வழி பாதையாக உள்ளது. ஆக இந்த நீர்வழிப்பாதையானது எப்போதும் மிகவும் பரப்பரப்பான நீர்வழிப் பாதையாகவே இருந்து வருகிறது.
இந்தியா இறக்குமதி
SCA தரவின் படி, 2020ம் ஆண்டில் ஏறத்தாழ 19,000 கப்பல்கள் (சராசரியாக ஒரு நாளைக்கு 51.5) 1.17 பில்லியன் டன்கள், இந்த பாதை வழியாக கடப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பாக கச்சா எண்ணெய் வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கால்வாய், இந்திய வணிகத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் எண்ணெயில் சுமார் 85% இறக்குமதி செய்யப்படுகிறது.
விலை அதிகரிக்கலாம்
ஆக தற்போது முடங்கியிருக்கும் சூயஸ் கால்வாயால், கச்சா எண்ணெய் விலையில் பெரியளவில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனால் கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் சில்லறை விற்பனையிலும் எரிபொருள் விலையானது அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா தான் அதிகம்
ஏனெனில் சீனா, தென் கொரியா, சிங்கப்பூரை விட, சூயஸ் கால்வாய் வழியாக கச்சா எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெய் பொருட்களை, அதிகம் இறக்குமதி செய்வது இந்தியா தான். ஆக சூயஸ் கால்வாயில் ஏற்படும் எந்தவொரு பிரச்சனையும், இந்தியாவுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். இந்தியா ஒரு நாளைக்கு சுமார் 5 லட்சம் பேரல்கள் எண்ணெயை சூயஸ் கால்வாய் வழியாக இறக்குமதி செய்கிறது.
மற்ற நாடுகளுக்கும் பிரச்சனை தான்
இதே தென் கொரியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகள் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேரல்களை இறக்குமதி செய்கின்றன. தற்போது சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள எவர் கிவன் கப்பலுக்கு இருபுறம் பல கப்பல்கள் உள்ள நிலையில், அவற்றில் பல கச்சா எண்ணெய் டேங்கர்களும் உள்ளன. இதனால் இன்னும் கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம் எனலாம்.