உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் வேலையை இழந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் வரும் 2025ம் ஆண்டுக்குள் சுமார் 20 முதல் 25 லட்சம் ஐடி ஊழியர்கள் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஐடி துறை
இந்தியாவின் ஐடி துறை ஆண்டுக்காண்டு சரிந்து வருகிறது என்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் 22 லட்சம் பணியாளர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டிய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. சுமார் 57 சதவீத ஐடி ஊழியர்கள் எதிர்காலத்தில் ஐடி துறையில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் வேறு துறைகளில் அவர்கள் வேலை பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆய்வு அறிக்கை
டேலண்ட் எக்ஸோடஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் 2022 ஆம் ஆண்டை பொறுத்தவரை ஐடி நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
22 லட்சம் ஊழியர்கள்
2023 ஆம் நிதியாண்டில் ஒப்பந்த பணியாளர்கள் அதிக அளவில் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் இதனால் ஐடி துறை வளர்ச்சி அடையும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சம்பள உயர்வு, ஊழியர்களின் செயல் திறனில் உள்ள அதிருப்தி ஆகியவை காரணமாக 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பணிபுரியும் ஐடி ஊழியர்கள் சுமார் 20 முதல் 22 லட்சம் பேர் ஐடி வேலையை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
வளர்ச்சி
கடந்த பத்தாண்டுகளில் இந்திய ஐடி துறை நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதும் சுமார் 15.5 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 227 பில்லியன் டாலர்கள் ஐடி நிறுவனத்தின் மூலம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நஷ்டம்
ஆனால் அதே நேரத்தில் உலகளாவிய பொருளாதார மந்த நிலை மற்றும் தொற்று நோய் பரவல் காரணமாக ஐடி நிறுவனங்கள் நஷ்டம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் திறமையுள்ள ஊழியர்கள் மட்டுமே ஐடி துறைகளில் நீடிக்க முடியும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
சலுகைகள்
மேலும் ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு போன்ற பிற சலுகைகள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் புதிதாக பணி அமர்த்துதல் என்பது மிகவும் குறைந்துவிடும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐடி ஊழியர்கள் சுமார் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்ற அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.