இந்தியா என்கிற நாடு, சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, கச்சா எண்ணெய் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
கடந்த சில வருடங்களாகத் தான், உலக அளவில், மரபு சார்ந்த எரிசக்தியில் இருந்து, மரபு சாரா எரிசக்திகளான சோலார், காற்றாலை போன்ற முறைகளை நிறைய பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம்.
ஆனால் இன்னும் நம் வாகனங்கள் தொடங்கி தொழிற்சாலைகள் வரை பெட்ரோல், டீசல் போன்ற அடிப்படை எரிபொருளைத் தான் அதிகம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இந்த அடிப்படை எரிபொருட்களுக்கு, கச்சா எண்ணெய் தான் அடிப்படை மூலப் பொருளாக இருக்கிறது.
இறக்குமதி
இந்தியாவின் ஒட்டு மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய்க்கு மட்டுமே, நாம் கணிசமாக செலவழித்துக் கொண்டு இருக்கிறோம். இதனால் இந்தியாவுக்கு கணிசமான அளவில் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) ஏற்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சரி இப்போதைய செய்திக்கு வருவோம்.
எண்ணெய் இறக்குமதி
கடந்த 8 வருடங்களில் இல்லாத அளவுக்கு, அக்டோபர் 2011-க்குப் பிறகு, இந்தியா, தன் கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரிய அளவில் குறைத்து இருக்கிறதாம். எவ்வளவு குறைத்து இருக்கிறது என்றால், கடந்த மே 2020-ல், நாள் ஒன்றுக்கு 3.18 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்து இருக்கிறார்களாம்.
ஒப்பீடு
இது கடந்த ஏப்ரல் 2020-ஐ விட 31 சதவிகிதம் குறைவாம். மே 2019-ல் செய்த கச்சா எண்ணெய் இறக்குமதி உடன் ஒப்பிட்டால் 26 சதவிகிதம் குறைவாம். அது சரி, ஏன் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி இந்த அளவுக்கு குறைந்து இருக்கிறது என்று கேட்கிறீர்களா..?
காரணங்கள் என்ன
ஏற்கனவே இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு கச்சா எண்ணெய்யை வாங்கி சேமித்து வைத்துவிட்டார்கள். அது போல எரிபொருளுக்கான தேவையும், கொரோனா லாக் டவுனால் கணிசமாக குறைந்து இருக்கிறதாம். எனவே தான் மே 2020-ல் கச்சா எண்ணெய் இறக்குமதி இவ்வளவு குறைந்து இருக்கிறதாம்.
எண்ணெய் ஏற்றுமதி நாடுகள்
இந்தியா தன் கச்சா எண்ணெய்யை, சவுதி அரேபியா, ஈராக், வெனிசுலா போன்ற பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இப்போது எல்லா நாடுகளோடும் தன் இறக்குமதியை குறைத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எப்போது கொரோனா லாக் டவுன் முழுமையாக நீக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து எல்லாம் சீரடையுமோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications