களத்தில் போர் நின்றிருக்கலாம், ஆனால் யார் பலசாலி என்ற விவாதம் இப்போதுதான் சூடுபிடித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள 14 நாள் போர் நிறுத்தம் உலகிற்கு தற்காலிக நிம்மதியை தந்தாலும், இரு நாடுகளும் இந்த அமைதியை தங்களுக்கு சாதகமாக சித்தரிக்க போட்டி போடுகின்றன. நாங்கள் அடிபணிய வைத்தோம் என ஒருபுறம் அமெரிக்காவும், எங்கள் நிபந்தனைக்கு அவர்கள் வந்தார்கள் என மறுபுறம் ஈரானும் அறிக்கை விடுத்து வருகின்றன. உண்மையில் இந்த சதுரங்க ஆட்டத்தில் ஜெயித்தது யார்? பின்னணியில் நடக்கும் அரசியல் காய்நகர்த்தல்கள் என்ன?
இந்த அதிகார போட்டிகளுக்கு நடுவே எங்களுக்கு எப்போது தான் பெட்ரோல், டீசல் விலை குறையும் என இந்தியா காத்து கொண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. வெறும் 14 நாட்கள் போதுமா? நீண்ட கால நிம்மதி எப்போது? இந்த சதுரங்க ஆட்டத்தில் இந்தியாவுக்கான சாத பாதங்கள் என்ன? உண்மையில் எது தான் வெற்றி? வாருங்கள் பார்க்கலாம்.

எண்ணெய் வர்த்தகத்தில் தடையை ஏற்படுத்தி உலகையே ஆட்டம் காண வைத்த ஈரானா, தனது பொருளாதார பலத்தாலும், ராணுவ பலத்தாலும் மிரட்டி வந்த அமெரிக்காவா, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இது இரு தரப்பு போர் நிறுத்தம் என்று கூறியுள்ளார். 'இந்த தற்காலிக நிறுத்தம் மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியே வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகளை வலியுறுத்தி, பேச்சு வார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது. இது நீண்ட கால அமைதிக்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இதில் யார் பெரிது என்ற வார்த்தை போரானது தற்போது தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும் பாதுகாப்பாக திறக்க ஒப்பு கொள்வதை பொறுத்தே இந்த ஒப்பந்தம் அமையும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் ஈரானிடம் இருந்து பெறப்பட்ட 10 அம்ச திட்டம் மற்றும் 15 அம்ச ஒப்பந்தம் என அனைத்தையும் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 அன்று இஸ்லாமாபாத்தில் நடக்க உள்ள பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படுமா?
ஏனெனில் ஏற்கனவே அமெரிக்கா இது ராஜதந்திர வெற்றி என கூறியுள்ளது. இதன் மூலம் நீண்ட கால அமைதிக்கான வழி பிறந்துள்ளதாகவும் கூறுகிறது. ஆனால் ஈரானோ அதற்கு எதிர்மாறாக இது அமெரிக்காவுக்கு வரலாற்று சிறப்புமிக்க படுதோல்வி என்று வர்ணித்துள்ளது. இதனிடையே பலரின் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி, உண்மையில் இதில் யார் தான் ஜெயித்தார்கள். ஏனெனில் இரண்டு நாடுகளுமே தங்களை வெற்றியாளர்களாக காட்டிக் கொள்ள முயற்சித்து வருகின்றன.
ஓருபுறம் எங்கள் பொருளாதார தடை, ராணுவ பலத்தால் ஈரான் பேச்சு வார்த்தைக்கு வந்தது என்ற பிம்பத்தை டிரம்பும், எண்ணெய் போக்குவரத்தில் கொடுத்த நெருக்கடியால் அமெரிக்கா வழிக்கு வந்ததாக ஈரானும் மார்தட்டிக் கொள்கின்றன. உண்மையில் அமெரிக்கா போன்ற பொருளாதார ரீதியாக வலிமையாக உள்ள நாட்டை பேச்சு வார்த்தைக்கு வரவைத்ததே ஈரானுக்கு வெற்றி தான். ஆனால் நிபுணர்கள் இந்த தற்காலிக போர் நிறுத்தத்தால் இந்தியா போன்ற பெரிய நுகர்வு நாடுகள் தான் தற்போதைய வெற்றியாளர்கள் என கூறுகின்றனர். போர் பயத்தில் எண்ணெய் விலை என்ன ஆகுமோ என்ற அச்சத்தின் மத்தியில், இன்று மிகப்பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.
இதனிடையே இந்திய பங்கு சந்தைகள் கூட 2,600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டு உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையிலான இந்த 14 நாட்கள் போர் நிறுத்தம், இரு நாடுகளுக்குமே கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றி தான் . இதில் யார் ஜெயித்தார்கள் என்பதை காட்டிலும் உண்மையான பயனாளி உலக பொருளாதாரம் தான். இருப்பினும் இந்த குறுகிய கால வெற்றி, நீண்ட கால அமைத்திக்கு ஒரு அடித்தளமாக அமைய வேண்டுமே தவிர, அடுத்த மோதலுக்கான ஆயத்தமாக இருக்க கூடாது.


Click it and Unblock the Notifications