கடந்த சில தினங்களாகவே இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் எவ்வளவு தான் சரியுமோ? எவ்வளவு தான் இழப்புகளை முதலீட்டாளர்களுக்கு கொடுக்குமோ? தெரியவில்லை.
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் அன்னிய முதலீடுகளானது, தொடர்ந்து வெளியேறி வருகின்றது.
கடந்த ஜூன் 15வுடன் முடிவடைந்த 15 நாட்களில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு மட்டும் 2.61 லட்சம் கோடி அல்லது 6.3% சரிவினைக் கண்டு, 41.51 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
எஃப்பிஐ முதலீடு வெளியேற்றம்
இது மே 31, 2022வுடன் முடிவடைந்த 15 நாட்களில் 44.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு சரிவினைக் கண்டு வரும் நிலையில், எஃப்பிஐ (FPI)-க்கள் நடப்பு மாதத்தில் 40,000 கோடி ரூபாய்க்கு மேலாக தங்களது பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர்.
என்னென்ன துறைகளில் வெளியேற்றம்
இந்த மாதத்தின் முதல் பாதியில் மட்டும் 24,949 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர்.
நிதிச் சேவைகள், நுகர்வோர் பொருட்கள், எஃப் எம் சி ஜி, உலோகங்கள் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் இருந்து, அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் (FPI) தொடர்ந்து வெளியேறி வருகின்றன.
முதலீடுகளை ஈர்க்கும் துறை
அதேசமயம் எண்ணெய் மற்றும் எரிவாயு, கெமிக்கல் துறைகளில் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஜூன் 15வுடன் முடிவடைந்த முதல் 15 நாட்களில் மின் துறையானது விற்பனையை கண்டது.
எஃப் பி ஐ அதிகளவில் வெளியேற்றம்
ஜூன் 15வுடன் முடிவடைந்த 15 நாட்களில் எஃப் பி ஐக்களின் நிகர விற்பனை 8050 கோடி ரூபாயாக இருந்தது. இது தொடர்ந்து நிதித் துறையில் விற்பனை அதிகமாக இருந்த நிலையில், அதிகளவிலான முதலீடுகள் வெளியேறியன. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் மே 31வுடன் முடிவடைந்த 15 நாட்களில் 3894 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மட்டுமே வெளியேறியிருந்தன.