டாடா ட்ரஸ்டின் கீழ் இயங்கும் ஆறு ட்ரஸ்டுகளின் பதிவுகளை மத்திய வருமான வரித் துறையினர் ரத்து செய்து இருக்கிறார்கள். எனவே டாடா குழும நிறுவனத்துக்கு சுமாராக 12,000 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டி இருக்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. டாடா ட்ரஸ்டின் ஆர்டிகள்ஸ் ஆஃப் அசோசியேஷனில் (இந்த ட்ரஸ்டை எதற்கு நடத்துகிறார்கள் எனச் சொல்லப்பட்டு இருக்கும் ஒரு வகையான டாக்குமெண்ட்கள்) சொல்லப்பட்டு இருப்பது போல செயல்படாமல், வேறு வகையில் செயல்பட்டதை காரணமாகச் சொல்லி இருக்கிறார்கள்.
டாடா ட்ரஸ்டின் கீழ்
1. ஜாம்ஷட் ஜி டாடா ட்ரஸ்ட் (Jamsetji Tata Trust),
2. ஆர் டி டாடா ட்ரஸ்ட் (RD Tata Trust),
3. டாடா எஜிகேஷன் ட்ரஸ்ட் (Tata Education Trust),
4. டாடா சோஷியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட் (Tata Social Welfare Trust),
5. சர்வஜனிக் சேவா ட்ரஸ்ட் (Sarvajanik Seva Trust,
6. நவாஜ்பாய் ரத்தன் டாடா ட்ரஸ்ட் (Navajbai Ratan Tata Trust),
7. சர் தொராப்ஜி டாடா ட்ரஸ்ட் (Sir Dorabji Tata Trusts),
8. சர் ரத்தன் டாடா ட்ரஸ்ட் (Sir Ratan Tata Trust) என பல ட்ரஸ்டுகள் இயங்கி வருகின்றன.
இதில் எல்லா ட்ரஸ்டுகளும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கிறார்கள். டாடா சன்ஸ் நிறுவனம் தான், அனைத்து டாடா குழும நிறுவனங்களுக்கும் தாய் நிறுவனம். மேலே சொன்ன ட்ரஸ்டுகள் பட்டியலில் முதல் ஆறு நிறுவனங்கள் மட்டும் சுமார் 39,000 டாடா சன்ஸ் நிறுவன பங்குகளை வைத்திருக்கிறார்களாம். சர் தொராப்ஜி டாடா ட்ரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா ட்ரஸ்ட் ஆகிய இரண்டு ட்ரஸ்டுகள் தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவிகித பங்குகளை வைத்திருக்கின்றன.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில், டாடா ட்ரஸ்ட்டுக்கு வழங்கி இருக்கும் ஆர்டரில் "வருமான வரிச் சட்டம் பிரிவு 115 (TD)-யை மீண்டும் கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த சிறப்புச் சட்டப் பிரிவு, சில வகையான ட்ரஸ்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சட்டப் பிரிவின் படி, ஒரு ட்ரஸ்டின் பதிவு ரத்து செய்யப்பட்டால், அந்த ட்ரஸ்டுக்கு கொடுத்ததாகச் சொல்லி வரி விலக்கு பெற்ற வருமானத்துக்கு, வரி செலுத்த வேண்டும்".
"அதோடு ஒரு ட்ரஸ்டை தொண்டு அமைப்பில் (Charitable Trust) இருந்து தொண்டு செய்யாத அமைப்பாக (Non charitable Trust) மாற்றினாலோ அல்லது தொண்டு அமைப்பில் இருந்து, தொண்டு செய்யாத அமைப்புடன் இணைத்தாலோ அல்லது சொத்து பத்துக்களை எல்லாம் இன்னொரு தொண்டு செய்யும் ட்ர்ஸ்ட்டுக்கு மாற்றாமல் மூடிவிட்டாலோ வரி செலுத்த வேண்டி இருக்கும்" எனச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த சட்டப் பிரிவின் படி தான் தற்போது டாடா ட்ரஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்து ஒரு வருமான வரித் துறை ஆர்டரும் போட்டு இருக்கிறார்களாம்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால், வருமான வரித் துறை தான் டாடா ட்ரஸ்டின் கீழ் செயல்படும் 6 ட்ரஸ்டுகளின் பதிவுகளை ரத்து செய்து இருக்கிறார்கள். ஆகையால் தான் டாடா ட்ரஸ்டுகள் வரி செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த வருமான வரித் துறை ஆர்டரை குறித்துப் பேசிய டாடா ட்ரஸ்ட் அமைப்பினர் "டாடா ட்ரஸ்ட் அமைப்பு, இந்த ஆர்டரைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருக்கிறது. விரைவில் தகுந்த சட்டப் ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டப் படி டாடா ட்ரஸ்டுகள் நடவடிக்கை எடுக்க சரியான புள்ளி விவரங்களும் சட்ட வழிகளும் இருக்கின்றன" எனச் சொல்லி இருக்கிறார்கள்.