ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2020-21ஆம் நிதியாண்டு துவங்கிவிட்ட நிலையில் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வரி மாற்றங்கள் அனைத்தும் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மாத சம்பளக்காரர்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய வரி மாற்றங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
மேலும் கொரோனா நாடு முழுவதும் மக்களைத் தாக்கியுள்ள நிலையில் வருமான வரி தாக்கல் செய்யவும், பான் - ஆதார் இணைக்கவும் ஜூன் 30 வரையில் கால நீட்டிப்பு செய்துள்ளது.
புதிய வரி விதிப்பு
பட்ஜெட் 2020 அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதைப் போல் இந்த வருடம் புதிய வரி விதிப்பும் உண்டு, பழைய வரி விதிப்பு உண்டு. மக்களாகிய நாம் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.
புதிய வரி விதிப்பில்
0 முதல் ரூ.2,50,000 வரையில் = 0% வரி
ரூ.2,50,000 முதல் ரூ.5,00,000 வரையில் = 5% வரி
ரூ.5,00,000 முதல் ரூ.7,50,000 வரையில் = 10% வரி
ரூ.7,50,000 முதல் ரூ.10,00,000 வரையில் = 15% வரி
ரூ.10,00,000 முதல் ரூ.12,50,000 வரையில் = 20% வரி
ரூ.12,50,000 முதல் ரூ.15,00,000 வரையில் = 25% வரி
ரூ.15,00,000 மேல் = 30 சதவீத வரி
ஆனால் இப்புதிய வரி விதிப்பைத் தேர்வு செய்தால் பல்வேறு விதமான வருமான சலுகையை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அதில் முக்கியமான standard deduction, 80சி பிரிவில் சில முக்கியச் சலுகை, வீட்டு வாடகை கொடுப்பனவு, பயணக கொடுப்பனவு, வீட்டுக்கடனுக்குச் செலுத்தப்பட்ட வட்டி எனப் பலவற்றை இழக்க வேண்டியிருக்கும்.
ஈவுத்தொகை
மியூச்சுவல் பண்டு மற்றும் உள்நாட்டு பங்கு முதலீட்டில் இருக்கும் ஈவுத்தொகைக்கு வரி விதிக்கப்பட உள்ளது.
புதிய வரி மற்றத்தில் மியூச்சுவல் பண்டு மற்றும் உள்நாட்டு பங்கு முதலீட்டில் இருக்கும் ஈவுத்தொகை அனைத்திற்கும் வரி செலுத்துவோரின் வரிபடுகை அடிப்படையில் வரி வசூலிக்கப்படும். உதாரணமாக நீங்கள் 30% வரிப் படுகையில் இருந்தால் நீங்கள் பெறும் ஈவுத்தொகைக்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
முன்பு பங்குச்சந்தையில் தொடர்புடைய மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் கிடைக்கும் ஈவுத்தொகைக்கு 11.2 சதவீதமும், கடன் சந்தை தொடர்புடைய மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் கிடைக்கும் ஈவுத்தொகைக்கு 29.12 சதவீதமும் வரி வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.7.5 லட்ச முதலீடு வரம்பு
ஊழியர்கள் NPS, superannuation பண்ட் மற்றும் EPF திட்டங்களுக்குச் செலுத்தப்பட்டும் தொகை ஒரு வருடத்திற்கு 7.5 லட்சம் ரூபாய் அளவை தாண்டினால் ரி செலுத்துவோரின் வரிபடுகை அடிப்படையில் வரி வசூலிக்கப்படும்.
இது பழைய வரி முறை அல்லது புதிய வரி முறை தேர்வு செய்தாலும் இப்புதிய வரி மாற்றம் பொருந்தும்.
வீட்டு கடன்
முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு இது ஜாக்பாட் தான். நீங்கள் வாங்கும் வீட்டின் மதிப்பு 45 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால், அதை வீட்டு கடன் மூலம் வாங்கியிருந்தால் ஏற்கனவே இருக்கும் 2 லட்சம் ரூபாய் வரி சலுகையுடன் கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் வரிச் சலுகை பெறலாம்.
ஸ்டார்ட்அப்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ESOP பங்குகள் கிடைக்கும். அதாவது ஒரு நிறுவனம் வளர்ச்சிக்கு முக்கியமான நபர் கருதப்படும் நிலையில் அவரைத் தொடர்ந்து நிறுவனத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் நிறுவனங்கள் அந்த ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும்.
இப்படி ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பங்குகளை, பங்கு ஒதுக்கப்பட்ட நாளில் 48 மாதங்களுக்குப் பின் விற்பனை செய்தால் அதற்கு வரி இல்லை. இதற்கு முன்பு ESOP பங்கு விற்பனைக்கு வரி உண்டு.