ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் ரீஃபண்ட் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். இந்நிலையில் வருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுவது போல் ஒரு போலி செய்தி இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. அதில் வரி செலுத்துபவர்களை குறி வைத்து வரி பாக்கி ரூ.6,000 இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதை பார்ப்பதற்கு உண்மையான அறிவிப்பை போலவே இருப்பதால் சில வரி செலுத்துவோர் குழம்பிப் போயுள்ளனர். இதுபோன்ற அறிவிப்பு முற்றிலும் போலியான ஆன்லைன் மோசடி என்று அரசாங்க செய்தி நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரியோ (PIB) உறுதிப்படுத்தியுள்ளது.

ரீஃபண்ட் பெற காத்திருக்கும் நேரத்தில் இது போன்ற செய்திகள் வந்தால் யாராக இருந்தாலும் பதற்றம் அடையத் தான் செய்வார்கள். ஏற்கனவே சரியான முறையில் ஐடிஆர் தாக்கல் செய்திருந்தாலும்.. அதில் பிழை இருக்குமோ அல்லது மீண்டும் வரி செலுத்த வேண்டுமோ என்று பயந்து நோட்டிஸ்-இன் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளாமலே சிலர் பணம் செலுத்தி விடுவார்கள்.
இப்படி பரவி வரும் தகவல் போலி என்று PIB குழு தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து ஒரு போஸ்டையும் பகிர்ந்துள்ளது. அதில், "ரூ. 6,000 வரி பாக்கி உள்ளதாக அனுப்பப்படும் அறிவிப்புகளை வருமானவரித்துறை அனுப்புவதில்லை. இது போன்ற போலி செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து அனுப்பப்படுகிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்", என்று எச்சரித்துள்ளது.
ஆன்லைன் ஃபிஷிங் மோசடி என்றால் என்ன?: சமீப காலமாக ஃபிஷிங் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் தொழில்நுட்பம் நன்மைகளை செய்திருந்தாலும் ஒரு புறம் மோசடிக்காரர்களுக்கும் உதவி வருகிறது .வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற அரசு துறைகளில் இருந்து அனுப்பப்படுவது போலவே மெயில் அல்லது எஸ்எம்எஸ் அனுப்புகின்றனர். இதை பார்க்கும் மக்களுக்கு உண்மை எது? பொய் எது? என்ற எண்ணம் துளி கூட வராமல் இருக்க வங்கிகளில் இருந்து அனுப்பப்படும் ஃபார்மட்டையே பயன்படுத்துகின்றனர்.
இதை வைத்துக்கொண்டு மக்களின் அக்கவுண்ட் விவரங்கள், பாஸ்வோர்ட், கிரெடிட் கார்ட் தகவல்கள் என அனைத்தையும் திருடி அதில் உள்ள பணத்தை மொத்தமாக அபகரித்து விடுகின்றனர். இதே யுக்தியைத் தான் தற்போது மோசடிக்காரர்கள் வருமான வரித்துறையின் பெயரைப் பயன்படுத்தி செய்து வருகின்றனர்.
வரித்துறை அதிகாரிகள் உங்களிடம் ஒருபோதும் ஈமெயில் வழியாக வங்கி கணக்கு விபரங்கள், பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை கேட்க மாட்டார்கள். இது போன்ற போலி அறிவிப்புகள் வந்தால் நீங்கள் உடனடியாக புகார் அளிக்கலாம்.
எப்படி புகார் அளிப்பது?: போலி நோட்டிஸ் வந்தால் உடனே அரசாங்க செய்தி நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரியோ ஃபேக்ட் செக் குழுவிடம் புகார் அளிக்கலாம். இந்த குழு ஒரு செய்தியின் உண்மை தன்மையை கண்டறிந்து அதிகாரப்பூர்வ தகவலாக வெளியிடும். அதை வைத்தே உங்களுக்கு அனுப்பப்படும் செய்தியின் உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாட்ஸ்அப் மூலமாக புகார் அளிக்க +91 8799711259 என்ற நம்பரை பயன்படுத்தலாம். ஈமெயில் மூலமாக புகார் அளிக்க [email protected] என்ற மெயில் ஐடியைப் பயன்படுத்தலாம்.
ஒருவேளை உங்களுக்கு இது போன்ற போலி நோட்டீஸ் வந்தால் உடனடியாக அந்த மெயிலை [email protected] அல்லது [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அதை பார்த்துவிட்டு அதிகாரிகள் பதிலளிப்பார்கள்.
நீங்கள் சரியான முறையில் வருமான வரி செலுத்தியிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் நோட்டீஸ் வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?:
மெயில் அல்லது எஸ்எம்எஸ் எது வந்தாலும் அதற்கு பதில் அளிக்க வேண்டாம். வரும் ஈமெயிலில் ஏதேனும் அட்டாச்மென்ட் இருந்தால் அதை திறக்காதீர்கள். அவற்றில் உங்களுடைய போன் அல்லது லேப்டாப்பை கண்ட்ரோல் செய்யும் வைரஸ் இருக்கலாம். மெயிலில் ஒரு லிங்கையும் வைத்து அனுப்புவார்கள். அதை தப்பித் தவறியும் கிளிக் செய்து விடாதீர்கள். அவற்றின் மூலம் உங்களுடைய வங்கி விவரங்கள் நீங்கள் வழங்காமலேயே அவர்களுக்கு போய்விடும். பாதுகாப்பை கருதி உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் ஆண்டிவைரஸ் அல்லது ஃபயர்வால் போன்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தி அப்டேட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications
