இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் கார்டினை இந்திய அரசு அனைத்து முக்கிய பரிவர்த்தனைகள், முக்கிய நிதி சம்பந்தமான சேவைகளிலும் கட்டாயம் இணைக்க வேண்டும் என கூறி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது வங்கிக் கணக்கில் பணம் எடுத்தல் மற்றும் பணம் போடுவதில், புதிய விதிமுறைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இதன் படி, இனி ஒருவர் ஒரு நிதியாண்டில் வங்கிக் கணக்கில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் போட்டாலும், பணம் எடுத்தாலும் பான் அல்லது ஆதார் கட்டாயம் என தெரிவித்துள்ளது. இது மே 26, 2022 முதல் இந்த நடவடிக்கையினை அமல்படுத்தவுள்ளது.
எங்கெங்கு?
மேலும் வங்கிகள், கூட்டுறவு வங்கி அல்லது தபால் நிலையங்களில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில், ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ அதற்கு பான் அல்லது ஆதார் கார்டு அவசியம் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
கணக்கு தொடங்குவதில் ஆதார் (அ) பான் அவசியம்
மேலும் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நடப்பு கணக்கு (Current Account) தொடங்கவோ, ரொக்க கடன் கணக்கு (Cash credit account) தொடங்கவோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்கானிக்க உதவும்
இந்த நடவடிக்கையானது ஏற்கனவே உள்ள டிடிஎஸ் உடன் சந்தேகத்திற்குரிய பண முதலீடுகள் மற்றும் பணம் எடுத்தல் தொடர்பான முழு செயல்முறையையும் கண்காணிக்க வழிவகுக்கும். மேலும் வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் 194N விதிகள் ஏற்கனவே உள்ளது, நினைவுகூறத்தக்கது.
கட்டாயம் குறிப்பிட வேண்டும்
ஆக இனி மேற்கூறிய பரிவர்த்தனைகளின் போது கட்டாயம் பான் கார்டு எண் அல்லது ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.
ஏற்கனவே பல்வேறு இடங்களில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மிகப்பெரிய பண பரிவர்த்தனைகளிலும், நடப்பு கணக்கிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு பிரச்சனைகளை எளிதில் கண்டறிய உதவும்.