நாளை ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. குறிப்பாக வருமான வரியில் வரவுள்ள மாற்றங்கள் என்ன? இது யாருக்கு எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக பல முறை ஏற்கனவே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள பான் ஆதார் இணைப்பு, கிரிப்டோகரன்சி-க்கு டிடிஎஸ், டாக்டர்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் என பல மாற்றங்கள் வரவுள்ளன.
இந்த 3 முக்கிய மாற்றங்கள் ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஆதார் பான் இணைப்பு
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைப்பு கால அவகாசம் ஜூன் 30, 2022 கடைசி தேதியாகும். ஏற்கனவே பல முறை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் இருமடங்கு அபராத தொகை, நாளை முதல் இருமடங்காக வசூலிக்கப்படலாம். ஆதார் - பான் இணைப்புக்கு அபராதமாக 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஆக ஜூலை 1 முதல் அபராதம் 1000 ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது.
டிடிஎஸ் - கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சிகள் லாபத்தின் மீது 30% வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 1 முதல் 194S- ஐ வரிகள் ஆணையம் டிஜிட்டல் சொத்துக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் ஒரு வருடத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் முதலீடு செய்யும்போது 1% டிடிஎஸ் பிடிதம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது லாபம் கண்டாலும், நஷ்டம் கண்டாலும் டிடிஎஸ் 1% இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களுக்கும் டிடிஎஸ்
மருத்துவர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள், விளம்பரங்கள் வாயிலாக பெறும் தொகைக்கும், ஜூலை 1 முதல் 10% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கபபட்டுள்ளது. இதில் 20,000 ரூபாய்க்குள் வருமானம் இருந்தால் டிடிஎஸ் பொருந்தும்.
பாதிப்பு யாருக்கு?
இதன் மூலம் நாளை முதல் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள், மருத்துவர்கள், சமூக வலை தளம் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், ஆதார் பான் இணைப்பு செய்யாதவர்கள் என பலருக்கும் கூடுதலாக கட்டணம் விதிக்கப்படலாம். அபராதமும் விதிக்கப்படலாம். மருத்துவர்கள் முதல் சமூக வலைதள பிரபலங்கள் வரையில் வருமானத்தில் வரி செலுத்த வேண்டியிருக்கும்.