இந்திய பொருளாதாரம் பல காரணிகளால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், எப்போது விலைவாசி குறைந்து நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்குத் திரும்பும் என்பது அனைத்து தரப்பினரின் முக்கியக் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் 2050ல் இந்தியா எப்படி இருக்கும் என்பது பற்றிக் கௌதம் அதானி சிறப்பான கணிப்பை வெளியிட்டுள்ளார்.
கௌதம் அதானி
இந்திய நிறுவனங்களும், வர்த்தகமும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்தியன் எக்னாமிக் 2022 மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நாட்டின் மிகப்பெரிய பணக்காரரும், பெரும் தொழிலதிபருமான கௌதம் அதானி 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 28-30 டிரில்லியன் டாலராக உயரும் எனத் தான் அதிகப்படியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா 2050
பொருளாதாரத்தில் மட்டும் அல்லாமல் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்திய பங்குச் சந்தை மூலதனத்தில் 40 டிரில்லியன் டாலர்களையும் சேர்க்கும், மேலும் வறுமையை முழுமையாக ஒழித்துவிடும் என்று அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
100 பில்லியன் டாலர்
மேலும் 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளின் அளவு 100 பில்லியன் டாலர்களை எட்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக அதானி கூறினார், இதன் மூலம் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய அன்னிய நேரடி முதலீட்டை பெறும் நாடாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.
3 டிரில்லியன் டாலர் டூ 30 டிரில்லியன் டாலர்
2022ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக இருக்கிறது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கு நான்கு முக்கியத் திசைகளையும் பயன்படுத்திக் கொள்வதற்கு, இந்தியாவைப் போலத் தனித்துவமாக உலகில் எந்த நாடும் இல்லை என்ற நம்பிக்கையில் தான் 2050ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலரை தொடும் எனத் தான் கூறுவதாகக் கௌதம் அதானி தெரிவித்தார்.
4 முக்கியத் திசைகள்
இந்தியாவின் மக்கள்தொகையின் டிவிடென்ட், நடுத்தர மக்களின் வளர்ச்சி, துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சி வாய்ப்பை கொண்ட பொருளாதாரம் ஆகியவற்றை நான்கு முக்கியத் திசைகள் எனக் குறிப்பிடுகிறார் கௌதம் அதானி.
முதலீட்டுத் திட்டம்
அடுத்த 10 ஆண்டுகளில் கிளீன் எனர்ஜி உற்பத்தி, உதிரிபாகங்கள் உற்பத்தி, டிரான்ஸ்மிஷன் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது அதானி குழுமம்.