டெல்லி: இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி கடந்த ஏப்ரல் 2019-க்குப் பிந்தைய மாதங்களில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி 2020-ல் 5.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது.
வளர்ச்சிக் கணக்குகள்
கடந்த இந்த பிப்ரவரி 2020-ல் மின்சாரம் 11.0 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த பிப்ரவரி 2019-ல் வெறும் 1.2 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மின்சாரத்தைத் தொடர்ந்து அதிக வளர்ச்சி கண்ட துறை என்றால் அது நிலக்கரி தான். இந்த பிப்ரவரி 2020-ல் நிலக்கரி 10.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த பிப்ரவரி 2019-ல் 7.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரியைத் தொடர்ந்து சிமெண்ட் இந்த பிப்ரவரி 2020-ல் 8.6 % வளர்ச்சி கண்டு இருக்கிறது. அதே போல சுத்திகரிப்பு பொருட்களும் இந்த பிப்ரவரி 2020-ல் 7.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது. உரங்கள் சொற்பமாக பிப்ரவரி 2020-ல் 2.9 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
சரிவுக் கணக்குகள்
இயற்கை எரிவாயு இந்த பிப்ரவரி 2020-ல் 9.6 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது. ஆனால் கடந்த பிப்ரவரி 2019-ல் 3.8 % வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.4 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த பிப்ரவரி 2019-ல் கூட 6.1 % வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீல் (இரும்பு உற்பத்தி) இந்த பிப்ரவரி 2020-ல் -0.4 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த பிப்ரவரி 2019-ல் 4.9 % வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்தத்தில், கடந்த பிப்ரவரி 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த பிப்ரவரி 2020-ல் இந்தியவின் முக்கிய எட்டு தொழில் துறைகள் 5.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருக்கின்றன.ஆனால் இந்த மார்ச் 2020-ல் இந்த அளவுக்கு வளர்ச்சி இருக்காது என உறுதியாகச் சொல்லலாம். அதான் கொரோனா வந்து, ஒட்டு மொத்த உலகத்தையும் ஷட் டவுன் மோடுக்குக் கொண்டு சென்று விட்டதே..!
இப்போது தான் தட்டுத் தடுமாறி, இந்திய தொழில் துறைகளின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கின. யார் கண் பட்டதோ தெரியவில்லை. கொரோனா வைரஸ் வந்து ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்தையும் சின்னா பின்னமாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த கொரோனாவில் இருந்து உலக பொருளாதாரமும், இந்திய பொருளாதாரமும் எப்படி மீளப் போகிறதோ தெரியவில்லை.