இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை அளித்து வரும் துறையில் ஐடி துறை முன்னணியில் உள்ளது எனலாம். சொல்லப்போனால் இந்திய பொருளாதாரத்தில் ஐடி துறையானது முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக உள்ளது.
அதிலும் கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையில் தேவையானது அதிகரித்துள்ளது.
குறிப்பாக கொரோனா காலத்தில் மற்ற துறை ஊழியர்கள் வீட்டில் முடங்கிக் கொண்டிருந்த நிலையில், ஐடி துறை சார்ந்த ஊழியர்கள் மட்டும் வழக்கத்திற்கு மாறாக சம்பள உயர்வு, பதவி உயர்வு என பல சலுகைகளை பெற்றனர்.
மோசமான பணவீக்கம்
இது ஒரு புறம் எனில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் உலகளாவிய அளவில் பணவீக்கமானது வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. பல நாடுகளிலும் வரலாறு காணாத அளவு பணவீக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் மிக பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன.
இலங்கை, பாகிஸ்தான் பிரச்சனை
இலங்கை பாகிஸ்தான் என இரு நாடுகளுமே கொரோனாவினால் மிகவும் பின் தங்கியிருந்த நிலையில், சீனாவின் கடன் வலையிலும் சிக்கிக் கொண்டுள்ளன. இதற்கிடையில் கொரோனா காரணமாக இவ்விரு நாடுகளின் அன்னிய செலாவணியும் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது. சொல்லப்போனால் பாகிஸ்தான் இலங்கை என இரு நாடுகளுமே இன்று மோசமான நிலையை எட்டியுள்ளன.
ஐடி துறையால் வளர்ச்சி
இதற்கிடையில் பொருளாதார நிபுணர்கள் இந்தியாவில் ஐடி துறையானது இல்லாவிட்டால், இந்தியாவும் பாகிஸ்தான் இலங்கை போல சென்றிருக்கலாம். கடந்த 20 ஆண்டுகளில் ஐடி துறையானது நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. ஐடி துறையால் இந்தியாவும் நல்ல வளர்ச்சியினை எட்டியுள்ளது.
ஐடி மக்களுக்கு சல்யூட்
ஒரு வேளை ஐடி துறையானது இந்த அளவுக்கு வளர்ச்சி காணவில்லை என்றால், இந்தியாவின் நிலையும் மோசமாக இருந்திருக்கும். ஐடி மக்களுக்கும், குறிப்பாக நாரயண மூர்த்திக்கும் ஒரு பெரிய சல்யூட் என நிதிசேவை ஆலோசகரான பி ஆர் சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சேவைத் துறையிலும் கவனம் வேண்டும்?
இந்தியாவினை பொறுத்தவரையில் ஐடி துறை என்பது வேலை வாய்ப்பு சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையில் நிபுணர்கள் இந்தியா சீனாவினை போல உற்பத்தி துறையில் மட்டும் கவனம் செலுத்துவது கூடாது. சேவைத் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.