டெல்லி: கொரோனா பரவலுக்கும் மத்தியிலும் இந்தியா அவசர கால கச்சா எண்ணெய் சேமிப்பு திட்டத்தின் மூலம் இன்றைய நிலவரப்படி 5,000 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்தியுள்ளது.
5 ஆயிரம் கோடி மிச்சமா? எப்படி வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப் போகிறோம். கொரோனா பரவலின் காரணமாக சர்வதேச நாடுகள் பலவும், நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே லாக்டவுனை அமல்படுத்தின.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையானது பெருத்த பின்னடைவை சந்தித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவு சரிந்தது. இதனை இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால், கச்சா எண்ணெய் விலையானது ஒரு கட்டத்தில் மைனஸூக்கே சென்றது.
இந்தியா சாதகமாக பயன்படுத்திக் கொண்டது
ஆனால் இப்படி நெருக்கடியான நிலையினை சாதகமாக பயன்படுத்தி இந்திய அரசு, அவசர கால எண்ணெய் சேமிப்பு திட்டத்தின் மூலம், கச்சா எண்ணெயை வாங்கி சேமித்தது. இதன் மூலம் 685.11 மில்லியன் டாலரினை சேமித்தது. (இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் ரூ.5000 கோடி ரூபாயாகும்)
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
இவ்வாறு சேமிக்கப்பட்ட கச்சா எண்ணெய் விலையானது சராசரியாக பேரலுக்கு 19 டாலர்களாகும். இன்றைய நிலையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 41.40 டாலர்களாகவும், இதே WTI கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 39.52 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகிறது. ஆக நிச்சயம் இது நல்ல லாபகரமான விஷயம் தான்.
விலை குறைப்பினை சாதகம்
இவ்வாறு சேமிக்கப்பட்ட எண்ணெய் இருப்பானது, ஏதேனும் சப்ளை பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, 9.5 நாட்கள் வரை இந்தியாவால் சமாளிக்க முடியும் என்றும் தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஏற்கனவே 5.33 மில்லியன் டன் எண்ணெய் இருப்பு இருக்கும் நிலையில் கூட, அரசு இந்த விலை குறைப்பினை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
இன்னும் ஸ்டாக் வரும்
இவ்வாறு வாங்கப்பட்ட கச்சா எண்ணெயானது தற்போது விசாகப்பட்டினத்தில் 1.33 மில்லியன் டன்னும், மங்களூரில் 1.5MT, பதூரில் 2.5MT நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. இதோடு மற்றொரு 6.5MT எண்ணெயானது கர்நாடாகவின் புதூரிலும், ஜெய்ப்பூரில் உள்ள சண்டிகோலிலும் வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சேமிப்பினை அதிகரிக்க திட்டம்
ராஜஸ்தானின் பிகானேர் மற்றும் குஜராத்தின் ராஜ்கோட் ஆகிய இடங்களில், இன்னும் இரண்டு வசதிகளுக்குக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டம் முடிவடைந்தால், ஒரு மாதத்திற்கும் மேலாக உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான எண்ணெய் இருப்பை வைத்திருக்க முடியும். அதோடு எல்லா நேரங்களிலும் அவசர காலத்தில் பயன்படுத்த 90 - 100 நாட்கள் எண்ணெய் இருப்பு இருப்பதை உறுதி செய்வதற்காக, சேமிப்பு வசதி அதிகரிக்கப்படுவதற்காக புதிய தளங்களை அடையாளம் காண ஆயில் அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.