ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் அதிகளவிலானோர் லஞ்சம் வாங்குவதாகவும், தனிப்பட்ட தொடர்புகளைப் பொதுச் சேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக ஊழல் குறித்த உலக நாடுகள் முழுவதும் கண்காணிப்பு செய்யும் ஒரு அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக முன்னேற வேண்டும் என இலக்குடனும், எளிதாக வர்த்தகத்தைத் துவங்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என முக்கிய இலக்குடன் இந்தியா இருக்கும் இந்த வேளையில் லஞ்சம் குறித்த Global Corruption Barometer அமைப்பின் இந்த ஆய்வு உலக நாடுகள் மத்தியில் பின்னடைவாக அமைந்துள்ளது.
ஆய்வு
Global Corruption Barometer அமைப்பு இந்தியாவில் ஜூன் 17 முதல் ஜூலை 17 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் சுமார் 2000 பேரிடம் ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் 50 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், 49 சதவீதம் பேர் தனிப்பட்ட தொடர்புகளைப் பொதுச் சேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தொடர்புகள்
பர்சனல் கான்டாக்ட்ஸ் அதாவது ஒருவருக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களின் ஆதிக்கம், பெயர் போன்றவற்றைப் பயன்படுத்தி அரசு மற்றும் பிற இடங்களில் காரியங்களைச் சாதித்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆய்வில் 49 சதவீதமாக உள்ளது.
இவர்கள் கூறும் ஒற்றைக் காரணம் என்னவென்றால், பர்சனல் கான்டாக்ட்ஸ்-ஐ பயன்படுத்தாவிட்டால் எங்களுக்கான சேவை கிடைப்பது இல்லை என்பது தான்.
லஞ்சம்
இந்தியாவில் பொதுத்துறை சேவைகளில் லஞ்சம் அதிகளவில் இருக்கிறது. மெதுவான இயக்கம், கடுமையான நடைமுறைகள், தெளிவற்ற அரசு வடிவுமுறைகள் போன்றவற்றின் காரணமாக மக்கள் மாற்று வழிகளைத் தேடிக்கொள்ளும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த லஞ்சம் அனைத்தும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை சேவைக்கானது என்பது தான் தற்போதைய பிரச்சனை என Global Corruption Barometer தெரிவித்துள்ளது.
மத்திய மாநில அரசுகள்
மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவைகள் அனைத்தும் மத்திய மாநில அரசுகள் ஒழுங்கு முறைப்படுத்தி, லஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை முழுமையாகக் குறைக்கும் வகையில் வடிவத்தை உருவாக்க வேண்டும் என இந்த அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.
பெரிய பிரச்சனை
இந்த ஆய்வின் படி இந்தியாவில் 89 சதவீதம் பேர் அரசு அமைப்புகளில் இருக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தைப் பெரிய பிரச்சனையாகக் கருதுகின்றனர். 18 சதவீதம் பேர் ஓட்டுப் பணம் தருவதைப் பெரிய பிரச்சனையாகக் கருதுகின்றனர், மீதமுள்ள 11 சதவீதம் பேர் sextortion பெரிய பிரச்சனையாகக் கூறுகின்றனர்.