உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீன இடையிலான வர்த்தக நட்புறவு ஜோ பைடன் ஆட்சியிலும் எவ்விதமான முன்னேற்றமும் அடையாமல் தொடர்ந்து மந்தநிலையிலேயே உள்ளது.
குறிப்பாக டிரம்ப் அரசு சீன நிறுவனங்களையும், சீன வர்த்தகத்தையும் குறிவைத்து வெளியிட்ட அறிவிப்புகள் பெரும்பாலானவை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும் காரணத்தால் இரு நாடுகள் மத்தியிலான நட்புறவில் முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.
அமெரிக்கா - சீன நாடுகளுக்கு மத்தியில் நிலவும் இந்தப் பிரச்சனை இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை கண்டிராத உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி ஹப் ஆக மாறும் வாய்ப்பு இந்தியாவிற்குத் தற்போது உருவாகியுள்ளது என ஹின்ரிச் பவுண்டேஷன் அமைப்புக் கூறுகிறது.
சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்கள்
இந்திய அரசு தற்போது சீனாவில் இருந்து வெளியேறும் உற்பத்தி வர்த்தகத்தைப் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக இந்தியாவிற்குப் பெற முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ், டிஜிட்டல் ஹார்ட்வேர் ஆகியவற்றை இந்தியாவில் தயாரிக்கும் வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
இந்தியாவுக்கு ஜாக்பாட்
இதேவேளையில் உலகிலேயே மிகப்பெரிய டெக்னாலஜி ஹப் ஆக மாறும் வாய்ப்பையும் இந்தியா பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா உற்பத்தி மட்டும் அல்லாமல் டெக் துறையிலும் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் வாய்ப்பை பெற்றுள்ளது.
ஜோ பைடன் உத்தரவு
சமீபத்தில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் சைனா ப்ரீ சப்ளை செயின் கொள்கையை முக்கியமான வர்த்தகத் துறையில் அமலாக்கம் செய்துள்ளார். இதன் மூலம் சீனாவில் வாங்கும் பொருட்கள், பெறும் சேவைகள் அனைத்தும் படிப்படியாகக் குறைக்கப்பட்டுப் பிற நாடுகளில் இருந்து பெற வழிவகுக்கும்.
முன்னணி நிறுவனங்கள்
இதன் ஒரு பகுதியாகப் பல ஆண்டுகளாக உற்பத்திக்காகச் சீனாவை நம்பியிருந்த ஆப்பிள், அமேசான், சாம்சங் ஆகிய நாடுகள் தனது வர்த்தகத்தை இந்தியாவிற்கும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது.
மலிவான இண்டர்நெட்
இந்தியாவில் தற்போது வர்த்தகப் போட்டி காரணமாக முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் உலகிலேயே மிகவும் மலிவான கட்டணத்தில் இண்டர்நெட் சேவையை அளிக்கிறது. இது டெக் நிறுவனங்களுக்கான அடித்தளத்தை வலிமையாக்கியுள்ளது.
விரைவில் 5ஜி
அடுத்தச் சில மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவையும் அறிமுகம் செய்யப்படும் காரணத்தால் இணைப்புப் பிரச்சனை முழுமையாகத் தீர்வது மட்டும் அல்லாமல் டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் இந்தியாவில் மகிப்பெரிய அளவில் அதிகரிக்கும். இது இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க முக்கியக் காரணமாக உள்ளது.
டெக் துறையில் அதீத முதலீடு
இதேவேளையில் அமெரிக்கா, ஐரோப்பா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி டெக் நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவிலான தொகையை முதலீடு செய்து வருகிறது. இது இந்தியாவில் டெக் நிறுவனங்களுக்கும், டெக் சார்ந்த பொருட்களை அதிகளவில் உருவாக்குவதற்கும் ஏதுவான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
அதிகளவிலான சலுகைகள்
இதேபோல் மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தி துவங்கும் வெளிநாட்டு நிறுவனங்குக்கு அதிகளவிலான சலுகைகளை அளித்து வருவது பல புதிய நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கத் தூண்டியுள்ளது.
உற்பத்தி, டெக் துறைகளில் கவனம்
அரசு உற்பத்தி, டெக் என இரு துறையிலும் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வரும் வேளையில் வெளிநாட்டில் மட்டும் அல்லாமல் உள்நாட்டிலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும் என்பதே இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் முக்கியக் காரணமாக உள்ளது.
டெக் ஹாப் கனவு
இண்டர்நெட், புதிய டிஜிட்டல் வாடிக்கையாளர்கள், புதிய நிறுவனங்களின் வருகை, அரசின் மிகப்பெரிய ஏற்றுமதி கனவு, அதிகளவிலான திறன் வாய்ந்த ஊழியர்கள், பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய ஊழியர்களின் குறைவான சம்பளம், அனைத்துப் பணிகளுக்கான ஊழியர்கள் தட்டுப்பாடு இன்றிக் கிடைக்கும் சூழ்நிலை ஆகியவை இந்தியாவை அடுத்த சில வருடத்திற்குள் உலகின் மிகப்பெரிய டெக் ஹாப் ஆக மாற்றும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
அதிகப்படியான வளர்ச்சி
உலகில் பிற நாடுகளை விடவும் இந்திய பொருளாதாரமும், இந்திய மக்களுக்கும் வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் சீனாவை நம்பியிருந்த பல லட்சம் நிறுவனங்கள் தற்போது இந்தியாவுக்கு வரக் காத்திருக்கிறது.