சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதால் குடியிருப்பு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான த்வஸ்தா, சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களால் கடந்த 2016ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
த்வஸ்தா நிறுவனம் குடியிருப்பு கட்டிடங்களுக்கான 3டி பிரின்டிங் பிளாட்பாரங்களில் ஆட்டோமேஷன் மற்றும் ரோபாடிக்ஸ் ஆகியவற்றை மேம்படுத்துதலில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியா சிமெண்ட்ஸ் - த்வஸ்தா
இந்த நிலையில் இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், த்வஸ்தா நிறுவனத்துடன் 3டி பிரிண்டிங் முறையை பயன்படுத்திக் கொள்ளவும், மூலப்பொருள் வடிவமைப்பை உருவாக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து உள்ளது.
தொழில்நுட்ப ஆராய்ச்சி
இதன் காரணமாக தொழில்நுட்ப ஆராய்ச்சி, தொழில்நுட்ப உதவிகளை இரு நிறுவனங்களும் பரிமாறிக் கொள்வதோடு, குறைந்த செலவில், குறுகிய காலத்தில் குடியிருப்புவாசிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரூபா குருநாத் மற்றும் த்வஸ்தா நிறுவனத்தின் இணை இயக்குனர் வித்யாசங்கர் ஆகியோர் கையொப்பம் இட்டனர்.
ஊக்க சக்தி
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் இயக்குனர் ரூபா குருநாத் கூறியபோது, த்வஸ்தா நிறுவனத்துடனான எங்களுடைய இந்த உறவு, இரு நிறுவனங்களும் முன்னோக்கிச் செல்வதற்கான ஊக்க சக்தியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
சிக்கனமான கட்டுமானம்
இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் த்வஸ்தா நிறுவனங்களின் ஒப்பந்தம் காரணமாக கட்டிடக்கலையின் தொழில்நுட்பங்கள் மேம்படும் என்றும் வேகமான மற்றும் சிக்கனமான கட்டுமான முறைகளுக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.
உத்வேக சக்தி
ஐஐடி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட த்வஸ்தா நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து இந்தியாவில் மாணவர்களால் புதிதாக தொடங்கப்படும் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உத்வேக சக்தியாக இருக்கும் என்று தொழிலதிபர்கள் இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.