மத்திய அரசு அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக வெளிநாட்டிலிருந்து ஃப்ரிட்ஜ் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பல மாடல் ஃப்ரிட்ஜ்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உள்நாட்டில் ப்ரிட்ஜ் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து ஃப்ரிட்ஜ்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃப்ரிட்ஜ் மார்க்கெட்
இந்தியாவின் ஃப்ரிட்ஜ் மார்க்கெட் சுமார் 5 பில்லியன் டாலர் என்ற நிலையில் இதில் பெரும்பாலானவை தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங், எல்ஜி ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. உள்நாட்டு பிரிட்ஜ் உற்பத்தி நிறுவனங்களான வோல்டாஸ், கோத்ரேஜ் ஆகியவை மிகக் குறைந்த அளவில்தான் விற்பனை செய்து வருகின்றன என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு ஃப்ரிட்ஜ் நிறுவனங்கள்
இந்த நிலையில் உள்நாட்டு ஃப்ரிட்ஜ் நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் விற்பனையை அதிகரிக்கவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் ஃப்ரிட்ஜ்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் ஒரு சில வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி
ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முழுமையாக தடை விதிக்காமல் உரிமம் அடிப்படையில் இறக்குமதி செய்ய அனுமதிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
உரிமம் அடிப்படையில்
தற்போது வெளிநாட்டில் இருந்து ஃப்ரிட்ஜ்களை யார் வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என்று அனுமதிக்கப்படும் நிலையில் இனி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே ஃப்ரிட்ஜ்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
உள்நாட்டு விற்பனை
வெளிநாட்டில் இருந்து ஃப்ரிட்ஜ்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தால் உள்நாட்டு நிறுவனங்களான வோல்டாஸ் ,கோத்ரேஜ் ஆகிய நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும் மேலும் சில ஃப்ரிட்ஜ் உற்பத்தி நிறுவனங்கள் புதியதாக தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேக் இன் இந்தியா
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், இறக்குமதியை ஊக்கப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையால் வோல்டாஸ், கோத்ரெஜ் அப்ளையன்சஸ் மற்றும் ஹேவெல்ஸ் இந்தியா லிமிடெட் போன்ற உள்ளூர் உற்பத்தியாளர்கள் பயனடையலாம் என்றும் கூறப்படுகிறது.