சீன பொருளாதாரம் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் வேகமாகவும் வலிமையாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவுக்குப் போட்டியாகப் பல நாடுகள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது, இதோடு சீனாவுக்கு இணையாக வளர்ச்சி கட்டமைப்புகளையும் பல நாடுகள் உருவாக்கியுள்ளது.
இந்தியா சீனாவுக்கு இணையான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகப் புதிய கூட்டணி திட்டத்தை உருவாக்கியுள்ளது.
சீனா
சீனா பல வளரும் நாடுகளுக்குப் பணத்தின் மீதும், வளர்ச்சியின் மீதும் ஆசை காட்டி தனது பெல்ட் ரோடு திட்டத்தின் மூலம் பல நாடுகளைக் கடன் வலையில் சிக்க வைத்துள்ளது. இலங்கை, ஆப்பிரிக்கா உட்படப் பல நாடுகள் இப்பட்டியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்திய அரசு முக்கியத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
முத்தரப்பு வளர்ச்சிக் கழகம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முத்தரப்பு வளர்ச்சிக் கழகம் (TDC) நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாகத் தனியார் நிறுவனங்கள் உடன் இணைந்து மத்திய அரசு இன்டோ பசிபிக் மற்றும் பிற முக்கிய வர்த்தகப் பகுதியில் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.
குளோபல் இன்னோவேஷன் பார்ட்னர்ஷிப்
பிரதமர் நரேந்திர மோடி-போரிஸ் ஜான்சன் சந்திப்பில் இந்தியாவின் குளோபல் இன்னோவேஷன் பார்ட்னர்ஷிப் (ஜிஐபி) துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பிற நாடுகளுடன் இணைந்து முத்தரப்புத் திட்டங்களுக்கு TDC நிதியைப் பயன்படுத்துவதற்கான டெம்ப்ளேட் உருவாக்கப்பட்டு உள்ளது.
முக்கிய நாடுகள்
இந்த இணைப்பு மூலம் குளோபல் இன்னோவேஷன் பார்ட்னர்ஷிப் திட்டத்திற்கான நிதியை TDC திட்டத்தின் வாயிலாகச் செலுத்தப்படும். முதற்கட்டமாக ஆப்பிரிக்கா, ஆசியா, இண்டோ பிசிபிக் பகுதியில் தொழில்நுட்ப மேம்பாடுகள் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
சீனா - இந்தியா
சீனா பிற நாடுகளைத் தனது கடன் வலையில் சிக்கவைப்பது மூலம் தன் நாட்டுப் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்து தனக்காக வர்த்தகத்தை உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்த ஆதிக்கத்தைக் குறைக்க உலக நாடுகள் உடன் இணைந்து இந்திய உருவாக்கியுள்ள இப்புதிய திட்டம் பெரிய அளவில் உதவும்.