இந்தியாவில் அமேசான், ஃபிளிப்கார்ட், மீஷோ, மிந்த்ரா போன்ற ஈ காமர்ஸ் நிறுவனங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் இருக்கும் மக்களும் ஈ காமர்ஸ் தளங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் போக்கு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கி இருப்பதால் மக்களை ஈர்க்க அமேசான் போன்ற நிறுவனங்கள் பிரத்தியேக சலுகைகளை அறிவிக்கின்றன. ஆனால் பெரும்பாலும் தள்ளுபடி என்ற பெயரில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதாவது நிறுவனங்கள் செயற்கையாக பொருட்களின் விலையை உயர்த்தி பின்னர் அதிக தள்ளுபடி வழங்குவதை போல காட்டுகின்றன என குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் முறைகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு Consumer Protection (E-Commerce) Rules, 2020 விதிகளில் முக்கியமான திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. மேலும், ஈ-காமர்ஸ் துறையில் Sponsored listings, Search result manipulation, Dark patterns ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிகள் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. நுகர்வோர் நலனை பாதுகாப்பதோடு, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் இடையே சரியான சமநிலையை பேணி, வெளிப்படையான ஈ-காமர்ஸ் சூழலை உருவாக்குவதே இந்த புதிய திருத்தங்களின் முக்கிய நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது.
ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தொடர்பாக தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் அமைப்பிற்கு 2025ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 17,71,622 புகார்கள் வந்துள்ளன. இதில் சுமார் 29 சதவீதமான புகார்கள் ஈ-காமர்ஸ் துறை தொடர்பானவை. எனவே தான் அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
திருத்தப்பட்ட விதிகளின்படி, ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிக்கப்படும் போதெல்லாம், குறைக்கப்பட்ட விலையையும், அதற்கு முந்தைய விலையையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். அதாவது தள்ளுபடி அறிவிக்கப்படுவதற்கு முந்தைய 30 நாட்களில் அந்த பொருள் விற்கப்பட்ட மிக குறைந்த விலையே முந்தைய விலை என வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஈ-காமர்ஸ் நிறுவனங்கள், 2023-ஆம் ஆண்டின் டார்க் பேட்டர்ன்களை தடுக்கும் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு விதிகள் கூறுகிறது. மேலும் நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளை ஆண்டுதோறும் சுய தணிக்கை செய்து, இணக்க சான்றிதழை காட்சிப்படுத்த வேண்டும்.
நுகர்வோர் விழிப்புடன் முடிவெடுக்க உதவும் வகையில் ஒரு பொருளின் நுகர்வோர் பயன்பாட்டிற்கான காலாவதி தேதி , பொருளுக்கான Returns, Refunds, Warranty, டெலிவரி மற்றும் கட்டண முறைகள் பற்றிய விவரங்கள் கட்டாயம் காட்டப்பட வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களாக இருந்தால், இறக்குமதியாளரின் விவரங்கள் மற்றும் எந்த நாட்டை சேர்ந்தது என்ற விவரம் இருக்க வேண்டும்.
Sponsored listings எவை என்பதை தெளிவான அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.ஒப்புதல் இல்லாமல் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட நோக்கங்களுக்காக இ-காமர்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications


