இந்தியா போர்பன் விஸ்கி மீதான வரியை 150 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக குறைத்திருக்கிறது. இது சன்டோரியின் ஜிம் பீம் போன்ற பிரபலமான அமெரிக்கா பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் நியாயமற்ற வரிகள் குறித்து விமர்சித்தார். அவருடைய விமர்சனங்கள் எழுந்த ஒரு நாளைக்குப் பிறகு இந்த மாற்றம் வந்துள்ளது.
பிப்ரவரி 13-ஆம் தேதியிட்ட அரசாங்க அறிவிப்பு ஒன்று வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. இந்த அறிவிப்பு சமூக ஊடக தளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த அறிவிப்பில் போர்பன் விஸ்கியின் மீதான சுங்கவரி 50 சதவீதமாகவும், கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு மொத்தம் 100 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்த வரி 150 சதவீதமாக இருந்தது.

இருப்பினும் இந்த வரிக்குறைப்பு போர்பனுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதுபான பொருட்களின் மீதான வரிகளில் எந்த மாற்றமும் இல்லை. அவை தொடர்ந்து 150 சதவீதமாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு முக்கியமாக அமெரிக்க போர்பன் உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும்.
இந்தியாவில் வெளிநாட்டு மதுபானங்களுக்கு அதிக இறக்குமதி வரி இருந்து வருகிறது. குறிப்பாக 35 பில்லியன் டாலர் மதிப்புள்ள மதுபான சந்தையில் நிலவும் இந்த சூழல் உலகளாவிய நிறுவனங்களுக்கு கவலை தரும் விஷயமாக மாறியுள்ளன. டியாஜியோ மற்றும் பெர்னோட் ரிக்கார்ட் போன்ற பெரிய மதுபான நிறுவனங்களின் தலைவர்கள், இந்தியாவில் வெளிநாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரிகள், சந்தை வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை பாதிப்பதாகக் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அதிகப்படியான வரி காரணமாக வெளிநாட்டு மதுபானங்களின் விலையும் அதிகரிக்கிறது. இதனால் இந்திய நுகர்வோர் வெளிநாட்டு மதுபானங்களை வாங்க தயங்குகின்றனர். போர்பன் விஸ்கியின் முன்னணி ஏற்றுமதியாளராக அமெரிக்கா இருக்கிறது.
இந்தியாவிற்கு வரும் பெருவாரியான போர்பன் விஸ்கிகளை அமெரிக்கா தான் ஏற்றுமதி செய்கிறது. இது போன்ற மதுபானங்கள் நான்கில் ஒரு பங்கு இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது. அமெரிக்கா மட்டுமின்றி சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்தும் விஸ்கி இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் டொனால்ட் டிரம்ப் அறிவித்த ரெசிப்ராக்கல் வரிமுறை. நியாயமற்ற வரி முறைகளை சமாளிப்பதற்காக எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்கிறதோ, அந்த நாடுகள் அனைத்திற்கும் இந்த வரி முறை பொருந்தும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ரெசிப்ராக்கல் வரி முறை என்றால் ஒரு நாடு விதிக்கும் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரி விதிக்கும் நடைமுறையாகும். வருவாயை அதிகரிக்கவும், வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கும் இந்த வரி முறையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications