இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து வாங்கி பெட்ரோல் ,டீசலாக மாற்றி பயன்படுத்துகிறது. இதில் பெரும்பாலான கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்கப்படுகிறது. ஈரான் போர்காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை நின்று போய்விட்டது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும்போது எல்லாம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும். தனியார் நிறுவனங்கள் மட்டுமே தற்போதைக்கு பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தி இருக்கின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை தாங்கள் ஏற்றுக்கொண்டு பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தாமல் இருக்கின்றன. ஆனால் இது எத்தனை மாதம் நீடிக்கும் என சொல்ல முடியாது.

இந்த சூழலில் தான் பெட்ரோல் ,டீசல் எரிபொருளுக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்ற முடிவினை எடுத்து இருக்கிறது. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பயோ எரிபொருள், சிஎன்ஜி, எல்என்ஜி, எத்தனால் போன்ற மாற்று எரிபொருள்களில் இயங்கக்கூடிய வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் அதிக அளவு எத்தனால் கலந்த பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இந்தியாவில் எதிர்காலமே இல்லை என கூறினார். வாகன உற்பத்தியாளர்கள் உயிரி எரிபொருட்கள் அதாவது பயோ எரிபொருட்கள், சிஎன்ஜி , எல்என்ஜி மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற மாற்று எரிபொருள்களை நோக்கி திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஏற்கனவே ஹைட்ரஜன் எரிபொருள் சார்ந்த போக்குவரத்துக்கான முன்னோடி திட்டங்களை துவங்கி விட்டதாக தெரிவித்தார். ஹைட்ரஜன் தான் எதிர்காலத்தில் எரிபொருள் அதேபோல முக்கிய எரிபொருளாக எத்தனாலும் திகழ்கிறது என கூறினார்.
தற்போதைக்கு 20% எத்தனால் கலந்த எரிபொருளில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன இது கூடிய விரைவில் உயர்த்தப்பட போகிறது என கூறினார். வரும் காலங்களில் இந்தியாவில் இன்னும் கச்சா எண்ணெய், பெட்ரோல் , டீசல் தேவை அதிகரிக்கும் என்பதால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல் டீசலுக்கு மாற்று எரிபொருட்களில் இயங்கக்கூடிய வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
இதற்கிடையே அதிக எத்தனால் கலந்த எரிபொருட்களை முறைப்படி பயன்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏற்ப சட்டத்தை மாற்ற அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன விதிகளில் மாற்றங்களை பரிந்துரைத்து, மத்திய அரசு ஒரு வரைவு அறிவிக்கையை வெளியிட்டு இருக்கிறது. ஏப்ரல் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிக்கையில் பெட்ரோலில் 85% எத்தனால், கலந்து பயன்படுத்துவதற்கும் 100% எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதற்கும் அனுமதி வழங்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமே வெளியிட்டு இருக்கிறது. தற்போதைக்கு மக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தரப்பிலும் இந்த வரைவு அறிக்கையின் மீது கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன் பின்னர் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இது நடைமுறைக்கு வந்தால் நிறுவனங்கள் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டி இருக்கும். எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு குட்பை சொல்ல வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைக்கு இந்தியாவில் பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது அதனை படிப்படியாக உயர்த்தி 100% எத்தனாலை எரிபொருளாக கொண்டு வர அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதற்கேற்ற வகையில் தான் இந்த சட்ட வரைவு கொண்டு வரப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications

