இந்தியா சீனா எல்லை பிரச்னை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இருதரப்பிலும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எனினும் கிழக்கு லடாக்கில், இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.
அப்பகுதியில், இரு நாட்டு படைகளும் கடந்த மூன்று மாதங்களா447க முகாமிட்டுள்ள நிலையில், இரு நாட்டு ராணுவத்தின் மேஜர் ஜெனரல் நிலையில் பல கட்ட பேச்சுகள் நடந்தும், படைகளை விலக்கி கொள்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின், வெளியுறவு விவகாரத்துக்கான மத்தியக் குழுவின் டைரக்டர் ஜெனரல், லியூ ஜியான்சோவை, சீனாவுக்கான இந்தியத் துாதர், விக்ரம் மிஸ்ரி சந்தித்து பேசியுள்ளார்.
சீனா வலியுறுத்தல்
அப்போது எல்லை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியப் பகுதியில் இருந்து சீன படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு சீன அரசு தடை
இதற்கிடையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு பொருட்களுக்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளது. அதோடு சில குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், ஆப்டிகல் பைபர் எனப்படும் இணையதள சேவை அளிப்பதற்கான வயர்கள் மீதான, ஆன்டி டம்பிங் எனப்படும் அதிகளவில் குவிக்கப்படுவதை தடுக்கும் தடையை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா தடை
ஆரம்பத்தில் கல்வான் பள்ளதாக்கில் ஏற்பட்ட இந்த பிரச்சனை காரணமாக, 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது சீனா இந்தியா இடையேயான பிரச்சனையை நீடிக்கலாம். முன்னதாக சீனா ஆப்கள் தடை தொடங்கி, ரயில்வே திட்டங்கள், நெடுஞ்சாலை துறையில் தடை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கிடையில் தற்போது கலர்டிவி இறக்குமதி கடும் கட்டுப்பாடு, தற்போது சோலார் பேனல்களுக்கு பாதுகாப்பு வரி நீட்டிப்பு என நடவடிக்கை தொடர்ந்து கொண்டே உள்ளது.
சோலார் உபகரணங்களுக்கு வரி
இந்தியா சோலார் மற்றும் சோலார் உபகரணங்களில் 80 - 90% இறக்குமதியானது, சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றது. எனினும் கொரோனாவினால் நலிவடைந்து போயுள்ள பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாகவும் சோலார் மற்றும் சோலார் உபகரணங்கள் இறக்குமதிக்கு ஆகஸ்ட் முதல் 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
SGD வரி குறைப்பு
சோலார் உபகரணங்களுக்கான SGD வரி ஜூலை 29ம் தேதியன்று காலாவதியாகிய நிலையில், இதுவே இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக சீனா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறக்குமதிக்கு SGD 25% விதிக்கப்பட்டிருந்தது. இது ஜூலை 2019 முதல், ஜனவரி 2020 வரையில் 20% ஆகவும், இது பின்னர் 15% குறைக்கப்பட்டுள்ளது. ஆக இந்த விகிதமே இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.