டெல்லி: இந்தியா சமீப காலமாக நிலக்கரி பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றது. இதனால் தொழில் துறை உற்பத்தி, மின் உற்பத்தி பாதிப்பு என பல பிரச்சனைகள் உள்ளன.
ஏற்கனவே எரிபொருள் விலை அதிகரிப்பால், இந்தியாவில் பணவீக்கம் பெரும் உச்சத்தினை எட்டியுள்ளது.
இந்த நிலையில் நிலக்கரிக்கும் பற்றாக்குறை என்பது மேற்கோண்டு பெரும் பிரச்சனையாக மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தள்ளுபடி விலையில் நிலக்கரியா?
ஆக இப்படியான இக்கட்டான நிலையை தவிர்க்க, பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், தள்ளுபடி விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பு குறைவு
மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பானது வெகுவாக குறைந்துள்ளது. மத்திய மின்சார ஆணையத்தின் தகவல்படி, 173 மின் நிலையங்களில் 23.32 டன் நிலக்கரி இருப்பு உள்ளது. தேவையான இருப்பில் வெறும் 35% மட்டுமே உள்ளது. தேவையில் பாதியளவு கூட இல்லை என்பதே கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
உற்பத்தி இருக்கலாம்
அரசு மின்சார வழங்கல் நிறுவனங்கள் பருவ மழை காலத்திற்கு ஏற்ப, நிலக்கரி கையிருப்பினை வைக்காவிட்டால், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் குறைந்த அளவிலான கையிருப்பு இருக்கும். இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கலாம்.
என் டி பி சி லிமிடெட் மற்றும் தாமோதர் வாலி கார்ப்பரேஷன் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, கூடுதலாக நிலக்கரி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்சனை
உலகின் 4வது பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்ட இந்தியாவில் அதிகளவிலான வெப்பம் காரணமாக, மின்சார தேவையானது மிக அதிகளவில் உள்ளது. ஆனால் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்வெட்டுகள் அதிகளவில் நிலவி வருகின்றது.
இந்தியாவின் மின் உற்பத்தி நிலையங்கள் சுமார் 2 மில்லியன் டன் நிலக்கரியை எரித்து மின்சார உற்பத்தி செய்கின்றன.