இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளியன்று வெளியிட்ட தகவல் புள்ளி விவர இணைப்பின்படி,
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து நான்காவது வாரமாக உயர்ந்து மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பர் 2 வரையிலான வாரத்தில் 561.16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி மே மாதத்தில் இருந்து 5 முறை நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும் ரெப்ரோ விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் முதலீட்டுச் சந்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆர்பிஐ இன்று ( வெள்ளிக்கிழமை ) வெளியிட்ட தகவல் படி அந்நியச் செலாவணி கையிருப்பு மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அந்நியச் செலாவணி
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 550.14 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் டிசம்பர் 2 வரையிலான வாரத்தில் 561.16 பில்லியன் டாலராக உயர்ந்து 3 மாத உச்ச அளவை தொட்டு உள்ளது.
2022 உச்ச அளவு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 632.7 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 561.16 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளன. இந்தச் சரிவுக்கு மிகவும் முக்கியக் காரணமாக விளங்குவதில் நாணயச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி கையிருப்பில் பெரும் பகுதியை விற்பனை செய்தது.
சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்த வேளையில், இந்திய ரூபாயின் சக முக்கிய நாணயங்களை ஒப்பிடுகையில் ரூபாய் மதிப்பின் சரிவுகள் மிகக் குறைவாகவே உள்ளது என்றும், அந்நியச் செலாவணி கையிருப்பின் அளவு பாதுகாப்பான அளவில் இருப்பதாகவும் கூறினார்.
ரூபாய் மதிப்பு உயர்வு
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் 2022 வரையிலான காலக்கட்டத்தில் பல முக்கிய நாணயங்களின் மதிப்புச் சரிந்தாலும், இந்திய ரூபாய் மதிப்பு 3.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தத் தரவுகளை ஆர்பிஐ தனது இருமாத நாணயக் கொள்கையை அறிவிக்கும் போது கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
ஆர்பிஐ தரவுகள்
அந்நிய செலாவணி கையிருப்பு அளவு வசதியாக இருப்பதாகவும், பெரும் சரிவுக்குப் பின்பு அதிகரித்துள்ளதாகவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நாணய கொள்கை கூட்டத்தில் கூறினார். இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 21, 2022 இல் 524.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து டிசம்பர் 2, 2022 இல் 561.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.