இந்திய பொருளாதாரம் உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் என்று கூறப்பட்ட நிலையில் 2023ல் நிலைமை தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட வட்டி விகித உயர்வு மற்றும் கொரோனா தொற்றுக் காலத்திற்குப் பின்பு இருந்து சாதகமான வர்த்தகச் சூழ்நிலைகள் அனைத்தும் மறைந்த நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளவீடு பாதிக்கப்பட்டு உள்ளது எனக் கோல்டுமேன் சாச்சஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி
2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, 2022ல் இதன் அளவு 6.9 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது எனக் கோல்மேன் சாச்சஸ் பொருளாதார வல்லுனர் ஆண்ட்ரூ டில்டன் தலைமையிலான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு வித வளர்ச்சி
2023 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் இரண்டு விதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது முதல் பாதையில் பொருளாதார வளர்ச்சி காரணிகள் மறைந்து மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்யும், இதற்கு முக்கியக் காரணமாக வட்டி விகித உயர்வால் பணப்புழக்கம் குறைந்து உள்நாட்டுத் தேவை பாதிக்கப்படுவதால் முதல் பாதி மந்தமாக இருக்கும்.
வளர்ச்சி காரணி
2ஆம் பாதியில் வளர்ச்சி கரணிகள் உலகளவில் சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்படுவதால் ஏற்றுமதியில் அதிகரிப்பு, முதலீட்டுச் சுற்றுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது கோல்மேன் சாச்சஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சி
இந்திய பொருளாதாரம் 2021-22 ஆம் நிதியாண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் 2022 காலண்டர் ஆண்டில் 6.9 சதவீதமாகவும், 2023 காலண்டர் ஆண்டில் 5.9 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ரீடைல் பணவீக்கம்
இதேபோல் 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் 6.1 சதவீதமாக இருக்கும் என்றும் கோல்மேன் சாச்சஸ் பொருளாதார வல்லுனர் ஆண்ட்ரூ டில்டன் தலைமையிலான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 2022 ஆம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 6.8 சதவீதமாக உள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர்
கொரோனா தொற்றுப் பாதிப்பு உலக நாடுகளில் குறைந்து பொருளாதாரம், வர்த்தகம் வளர்ச்சி பாதையில் இருக்கும் போது ரஷ்யா உக்ரைன் போர் மூலம் ஏற்பட்ட பொருளாதார வர்த்தகப் பாதிப்பால் பணவீக்கம் அதிகரித்துத் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால் இந்தியா மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை உருவாகியுள்ளது.
ஆர்பிஐ விளக்கம்
கடந்த 10 மாத இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் டார்கெட் அளவான 4-6 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் காரணத்தால், ஆர்பிஐ சமீபத்தில் பணவீக்கம் உயர்வுக்கான காரணத்தை அதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்கான விளக்கத்தையும் நாணய கொள்கை கூட்டம் அறிக்கையாக மத்திய அரசிடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி - இறக்குமதி
அக்டோபர் மாதம் நாட்டின் ஏற்றுமதி அளவு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 16.65 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல் பிப்ரவரி 2021க்கு பின்பு முதல் முறையாக நாட்டின் ஏற்றுமதி சரிந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 50.25 சதவீதம் அதிகரித்து 26.91 பில்லியன் டாலராக உள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.