ஒரு புறம் 40 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறைந்து விட்டது. இனி இந்தியாவின் பொருளாதாரம் என்ன ஆகுமோ? இனி வளர்ச்சி எப்படி இருக்கும்? அதிலும் ஜி20 நாடுகளிலேயே இந்தியாவின் வளர்ச்சி மிக மோசமானதாக உள்ளது.
இப்படி ஒரு மோசமான நிலையில் இருந்து இந்தியா எப்படி மீளப்போகிறது. சொல்லப்போனால் பழைய படி அந்நிய நேரடி முதலீடுகள் வரத்துக்கள் இருக்குமா? என்றெல்லாம் சந்தேகங்கள் இருந்து வருகின்றன.
ஏனெனில் பல சர்வதேச நிறுவனங்களும் இந்தியாவின் தரத்தினை மாற்றியமைத்து வருகின்றன. ஆனால் இதெல்லாம் நடக்காது என்பது போல் வந்துள்ளது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு.
இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது
ஏனெனில் கொரோனா பரவல் காலத்திலும் கூட இந்தியா சிறப்பான அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது தான். சொல்லப்போனால் கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் பொருட்டு நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகள் சீர்குலைந்து போனது எனலாம். ஆனால் இந்த கால கட்டத்தில் கூட இந்தியா 20 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.
கொரோனா காலத்திலும் வளர்ச்சி
சொல்லப்போனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. மேலும் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் முன்னேற்றம் கண்டது. அதோடு உள்நாட்டில் அந்நிய முதலீட்டுக் கொள்கைகளைத் தளர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்தியா கவர்ச்சிகரமான நாடு
அதிலும் கொரோனாவின் காரணமாகவும், அமெரிக்கா -சீன பிரச்சனை காரணமாகவும் சீனாவினை விட்டு வெளியே வர நினைக்கின்றன. அதில் பல நிறுவனங்கள் இந்தியா வர பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. ஏனெனில் இந்தியா முதலீடு செய்வதற்கான ஒரு கவர்ச்சிகரமான நாடாக உள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் பலத்த சலுகைகள் காரணமாக 2019ம் ஆண்டில் இந்தியா அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது.
நிர்மலா சீதாராமன் சொன்ன நல்ல விஷயம்
ஆக அதனை போலவே தற்போதும், அதாவது கொரோனா பரவிய காலத்திலும் கூட இந்தியா அதிகளவு அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் இந்தியா மொத்தம் 20 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொள்கைகள் திருத்தம் செய்யப்படுகின்றன
அதுமட்டும் அல்ல, இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு திருத்தம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்நிய முதலீட்டாளர்களும் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இணக்கமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற காரணங்களால் தான் கொரோனா பரவல் காலகட்டத்திலும் கூட இந்தியா அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொழில் தொடங்கும் அம்சம்
இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட மாநிலங்களை பற்றி கூறிய நிர்மலா சீதாராமன், அதில் முதலிடத்தில் ஆந்திர பிரதேசத்தினையும், இதனையடுத்து இரண்டாவதாக உத்திர பிரதேசம், அடுத்ததாக தெலுங்கானா இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஏற்றுமதி அதிகரிக்கும்
இந்தியா அனைத்துத் துறைகளிலும் இந்தியா சுயசார்பு நிலையை அடையும் இலக்கில் பயணித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் ஏற்றுமதியில் போட்டித் தன்மை அதிகரித்து நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் சுயசார்பு இந்தியா திட்டம் உள்நாட்டு அளவிலான வளர்ச்சிக்கான திட்டமாக இருந்தாலும், அது சர்வதேச அளவில் இந்தியாவை சிறப்பான வர்த்தக நாடாக உருவாக்கும் எனவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.