2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவில் எப்போதும் காணாத அளவிற்கு அதிகப்படியான அன்னிய முதலீடுகள் குவிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்று, நாடு முழுவதும் லாக்டவுன், வேலைவாய்ப்பின்மை, மக்கள் மத்தியில் வருமானம் குறைவு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.
அன்னிய முதலீட்டு அளவு
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 81.72 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளனர். இது 2019-20ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம்.
இதேபோல் 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் அன்னிய முதலீடு வாயிலாக 49.98 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நிலையில், 2020-21ஆம் நிதியாண்டில் இதன் அளவு 19 சதவீதம் அதிகரித்து 59.64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீட்டுக் கொள்கை
மத்திய அரசு அடுத்தடுத்துச் செய்து வந்த அன்னிய முதலீட்டுக் கொள்கை மாற்றத்தின் வாயிலாக, இந்தியாவில் வர்த்தகம் செய்யவும், வர்த்தகம் விரிவாக்கம் செய்யவும் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் குவிந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் FDI equity inflow மட்டும் 59.64 பில்லியன் டாலராக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மேலும் 2020ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மட்டுமே 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் முதலீடுகள் இல்லையெனில் கடந்த வருட அளவீட்டைத் தான் இந்தியா அடைந்திருக்கும்.
டாப் 3 நாடுகள்
இந்நிலையில் இந்தியாவில் 2020-21ஆம் நிதியாண்டில் அதிகமாக முதலீடு செய்துள்ள நாடுகள் பட்டியலில் முதல் 3 இடத்தைச் சிங்கப்பூர் (29%), இதைத் தொடர்ந்து அமெரிக்கா (23%), மொரீஷியஸ் (9%) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது. இந்த 3 நாடுகள் மட்டுமே சுமார் மொத்த முதலீட்டில் 61 சதவீத தொகையை முதலீடு செய்துள்ளது.
முக்கியத் துறைகள்
மேலும் 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவில் குவிந்த மொத்த அன்னிய முதலீட்டில் கம்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்வேர் துரையில் 44 சதவீத முதலீடும், கட்டுமான துறையில் 13 சதவீதமும், சேவைத் துறையில் 8 சதவீதம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
முக்கிய மாநிலங்கள்
இதேபோல் மொத்த அன்னிய முதலீட்டில் குஜராத் 37 சதவீத முதலீட்டையும், மகாராஷ்டிரா 27 சதவீதத்தையும், கர்நாடகா மாநிலம் 13 சதவீத முதலீட்டையும் பெற்று உள்ளது.