இந்திய மக்களின் முக்கிய உணவு பொருளான கோதுமை விலை தாறுமாறாக உயர்ந்து பல வருட உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் கோதுமை விலை உயர பல காரணங்கள் இருந்தாலும், உலகளவில் கோதுமைக்கு அதிகளவிலான தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை உருவாக மிக முக்கியமான காரணம் ரஷ்யா - உக்ரைன் போர் தான்.
இந்நிலையில் ஒன்றிய அரசு கோதுமை விலையை குறைக்க முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கோதுமை விலை
இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தினசரி பயன்படுத்தும் உணவு பொருளாக இருக்கும் கோதுமை விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் அதிகப்படியான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைச் சரி செய்யும் விதமாக ஒன்றிய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஓன்றிய அரசு
ஓன்றிய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தடை செய்யப்பட்ட பட்டியலில் கோதுமையைச் சேர்த்து உள்ளதாகவும், இந்தத் தடை மூலம் இந்திய மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அண்டை நாடுகளுக்கும், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் உதவி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளது.
அரசு கட்டுப்பாடு
மேலும் பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையிலும், தத்தம் அரசின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படும் என்று ஓன்றிய அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதன் மூலம் மொத்த கோதுமை ஏற்றுமதி அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து, சர்வதேச சந்தை தானியங்களின் விலை கிட்டத்தட்ட 40% ஏற்றம் கண்டதைத் தொடர்ந்து, தற்போது கோதுமை மற்றும் கோதுமை மாவின் ஏற்றுமதியை இந்தியா அரசு முடுக்கியுள்ளது.
கோதுமை உற்பத்தி
இந்த ஆண்டுக் கோதுமை உற்பத்தியானது 95 மில்லியன் டன்களாக (mt) இருக்கும் என வர்த்தகர்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அரசு மதிப்பீடுகளின்படி 105 மில்லியன் டன்கள். கணிப்புக்கும் உற்பத்திக்கும் மத்தியிலான சரிவும் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.