முன்பெல்லாம் பணத் தேவைக்கு ஏடிஎம் மையங்களுக்கும், வங்கிக்கும் ஓடிக் கொண்டிருந்த பலர் இன்று பெரும்பாலான விஷயங்களுக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்பி வருகின்றனர். மக்களின் இந்த பழக்கத்தினால் இந்தியாவில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை குறைந்ததோடு அவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
யுபிஐ வராத வரை பணம் எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரத்தையும், பணம் டெபாசிட் செய்வதற்கு சிஆர்எம் இயந்திரத்தையும் அதிகம் பயன்படுத்தினர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்து வருகிறது. இது குறித்த ரிசர்வ் வங்கி சில தரவுகளை வெளியிட்டது.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது 2024-ஆம் ஆண்டில் இருந்த ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை 2,18,815. ஆனால் 2026-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,09,331-ஆகக் குறைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026-ஆம் ஆண்டில் 9,000 இயந்திரங்கள் குறைந்துள்ளன.

இந்த எண்ணிக்கை எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரி இல்லை. ஒரு சில வங்கிகளில் ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஒரு சில வங்கிகளில் குறைந்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம் எண்ணிக்கை 61.56 சதவீதத்திலிருந்து 64.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் வங்கிகளின் ஏடிஎம் எண்ணிக்கை 36.51 சதவீதத்திலிருந்து 33.76 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு அப்படியே நேர்மாறாக சிறு நிதி நிறுவனங்களின் ஏடிஎம் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.
ஏடிஎம் எண்ணிக்கை தான் குறைந்திருக்கிறது என்று பார்த்தால் அவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.2.77 லட்சம் கோடி. ஆனால் 2026-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இந்த தொகை ரூ.2.20 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏடிஎம் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.
ஏடிஎம் பயன்பாடு குறைந்தால் என்ன நடக்கும்?: ஏடிஎம் பயன்பாடு குறைய குறைய வங்கிகளுக்கு வரக்கூடிய வருவாயும் குறையும். அதோடு ஒவ்வொரு ஏடிஎம்மையும் பராமரிக்க அதிக செலவு செய்ய வேண்டி வரும். இதற்கு மற்றொரு முக்கிய காரணமாக கூறப்படுவது டிஜிட்டல் பேமென்ட் தளங்களின் வளர்ச்சி. ஏனெனில் ஆன்லைன் மூலம் மக்கள் செய்யும் பரிவர்த்தனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரட்டிப்பாக மாறியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் ரூ.20.69 கோடியில் இருந்த பரிவர்த்தனை மதிப்பு 2026-ஆம் ஆண்டில் ரூ.33.51 கோடியாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
