அமெரிக்காவை ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் தாமதமாக இணையம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தற்போது இணையத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது.
அமெரிக்க மக்கள் தொகைக்கு இணையாக தற்போது இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இருப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த புள்ளிவிவரம் அமெரிக்காவை அதிர வைத்துள்ள நிலையில் இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் இருமடங்காகும் என்றும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய இணைய பயனர்கள்
இந்தியாவில் தற்போது 346 மில்லியன் இந்தியர்கள் இணையத்தின் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது அமெரிக்க மக்கள் தொகையான 331 மில்லியனை விட அதிகமாகும் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
இ-காமர்ஸ் பரிவர்த்தனைகள்
இ-காமர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் பயனர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது. இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) வெளியிட்ட அறிக்கையின்படி, சுமார் 346 மில்லியன் இந்தியர்கள் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது மொத்த அமெரிக்க மக்கள்தொகை 331 மில்லியனை விட அதிகம் என்றும் மதிப்பிட்டுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனைகள்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவிய நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்தது. இந்த காலகட்டத்தில் தான் இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் 230 மில்லியனிலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 51 சதவீதம் அதிகரிப்பைக் கண்டுள்ளது.
ஆண்-பெண் பயனர்கள்
இந்தியாவில் பெண் பயனர்களை விட ஆண் இணைய பயனர்கள் அதிகமாக உள்ளனர் என்றும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயனர்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாலின விகிதங்கள் உள்ளன என்றும் IAMAI KANTAR அறிக்கையில் 'இந்தியாவில் இணையம்' என்ற தலைப்பில் உள்ள கட்டுரை தெரிவிக்கிறது.
பொழுதுபோக்கு-தகவல் தொடர்பு
இணையத்தை பயன்படுத்தும் பிரிவுகளின் அடிப்படையில், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடகங்கள் ஆகிய மூன்றில் இந்தியர்கள் அதிகமாக இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதேபோல் மின்னஞ்சலை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மேலும் இந்தியர்கள் பலர் தற்போது இணையத்தை தொலைபேசி அழைப்பிற்கும் பயன்படுத்துகின்றனர்.
ஓடிடி சேவை
கிராமப்புற இந்தியாவில் ஓடிடி சேவைகளின் ஊடுருவல் நகர்ப்புற இந்தியாவிற்கு இணையாக உள்ளது. இருப்பினும், ஆன்லைன் கேமிங், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் போன்ற பிற டிஜிட்டல் சேவைகளின் ஊடுருவல் இன்னும் நகர்ப்புற பயனர்களுக்கு ஆதரவாக உள்ளது. இது கிராமப்புற மக்களிடையே இன்னும் அதிகளவில் பிரபலமாகவில்லை.
900 மில்லியன்
இந்தியாவில் 692 மில்லியன் செயலில் உள்ள இணைய பயனர்கள் உள்ளனர் என்றும், கிராமப்புற இண்டர்நெட் பயன்பாட்டின் வளர்ச்சியால் 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் 900 மில்லியன் இணைய பயனர்கள் இருப்பார்கள் என்றும் அறிக்கை மதிப்பிடுகிறது. இந்திய மாநிலங்களில், கோவா அதிகபட்சமாக இணைய பயனர்களையும் பீகார் மாநிலம் மிகக் குறைந்த இணைய பயனர்களையும் பெற்றுள்ளது என கூறப்படுகிறது.